கடல் நீர் மட்டம் உயர்ந்தால் கடலோர கிராமங்கள் மூழ்கும் அபாயம்.. எண்ணூர் டூ ஓஎம்ஆர் வரை பாதிப்பாம்!
கடலின் நீர் மட்டம் உயர்ந்தால் கடலோர கிராமங்கள் மூழ்கும் அபாயம் ஏற்படும். இதனால் எண்ணூர் முதல் ஓஎம்ஆர் சாலை வரை பாதிப்புகள் ஏற்படலாம் என்று சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Recommended Video
சென்னை: 2100-ஆம் ஆண்டுக்குள் கடலின் நீர் மட்டம் உயரும்போது லட்சக்கணக்கான வீடுகள் கடலில் மூழ்கும் நிலை ஏற்படும் என்று சமூக நல ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து சென்னையில் சமூக ஆர்வலர்கள் ஸ்ரீவத்ஸன், பூஜா, சரவணன் உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில் 2100-ஆம் ஆண்டுக்கு கடல்மட்டம் 1 மீட்டருக்கு உயர்ந்துவிடும் என 2012-ஆம் ஆண்டு இஸ்ரோ அறிக்கை வெளியிட்டது. அவ்வாறு கடலின் நீர் மட்டம் உயர்ந்தால் தமிழகத்தில் 3029.33 சதுர கி.மீ. பரப்பளவு கடலில் மூழ்கி லட்சக்கணக்கான வீடுகள் மூழ்கும்.
சென்னையை பொறுத்தவரை மணலி, எண்ணூர் அனல் மின் நிலையங்கள், கொடுங்கையூர் குப்பைக்கிடங்கு உள்ளிட்டவை கடல்நீர் மட்ட உயர்வின் காரணமாக நீரில் மூழ்கும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் செய்யூர் அனல் மின் நிலையமும் மூழ்கும். கடற்கரையில் இருந்து மக்கள் வெளியேறுவதே இந்த அபாயத்தில் இருந்து தப்பிக்க கூடிய ஒரே வழி.
உள்ளூர் சமுதாயம்
தமிழ்நாடு மாநில கடற்கரை மண்டல் மேலாண்மை குழு புதிதாக செய்திருக்கும் கடற்கரை மண்டல மேலாண்மை திட்டத்தை இந்த மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாத முதல் வாரத்திலோ வெளியிடுவதாக உள்ளனர். அந்த திட்டத்தில் அபாய கோடு நிர்ணயித்திருக்க வேண்டும், மீனவர்களுக்கான மற்ற உள்ளூர் சமுதாயத்துக்கான நீண்ட கால குடியிருப்பு திட்டங்கள் தெளிவாக காண்பிக்கப்பட்டிருக்க வேண்டும். நிலபயன்பாடுகள் தெளிவாக குறிப்பிட்டிருக்க வேண்டும்.
எச்சரிக்கை இல்லை
இவைகள் இருந்தால் மட்டுமே கடற்கரை மண்டல மேலாண்மை திட்டத்தை ஏற்றுக் கொள்வோம். தாழ்வான இடங்களிலும் ஆபத்தான இடங்களிலும் கட்டமைப்புகள் அதிகமாக காணப்படுகிறது. எந்த ஒரு துறையும் இந்த திட்டமிடலில் எச்சரிக்கைகளை பயன்படுத்தியது போல் தெரியவில்லை.
வலிமை குறைக்கும்
கடற்கரை சட்டத்தின் வலிமையை குறைக்கும் விஷயத்தில் அரசு இறங்கி உள்ளது. ஒரு ஆண்டுக்கு இரு முறை கடற்கரை சட்டத்தை திருத்த வேண்டும். 2015-இல் ஆய்வு செய்த அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும். பூமியயன் வெப்பம் உயருவதால் கடல்நீர் மட்டம் உயரும் என்பதை அனைவரும் ஒப்புக் கொண்டுவிட்டனர்.
புதிய திட்டத்தில்
அதில் எந்த அளவுக்கு பாதிப்பு இருக்கும் என்பது தெளிவாக தெரிய வேண்டும். அரசு கொண்டு வரப்போவதாக கூறும் புதிய திட்டம் 2012-ஆம் ஆண்டிலேயே வந்திருக்க வேண்டும். ஆனால் வரவில்லை. அந்த புதிய திட்டத்தில் இந்த பாதிப்பு குறித்து எந்தமாதிரியான தொலைநோக்கு திட்டங்களை கொண்டு வர போகிறார்கள், குறிப்பாக மீனவ குடியிருப்புகளுக்கு என்ன செய்ய போகிறார்கள்.
நகரமயமாக்கல் கூடாது
சென்னை போன்ற நகரங்களில் கடந்த 5 ஆண்டுகளாக கடலோர பகுதிகளில்தான் அதிகம் கட்டுமானம் நடைபெற்று வருகிறது. கிழக்கு கடற்கரை சாலையில் 10 ஆண்டுகளுக்கு முன்பு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட அனுமதிக்கப்படவில்லை. கடல்நீர் உயருவதால் அடுத்த 25 முசல் 30 ஆண்டுகளுக்குள் பல பகுதிகள் கடல்நீரில் மூழ்கும் என்ற நிலையில் அங்கு நகரமயமாக்கலை ஏன் குறைக்கக் கூடாது என்பதுதான் எங்கள் கேள்வி என்றனர்.