இடைத்தேர்தல் நடத்தாவிடில் 3 லட்சம் பேருடன் போராட்டம் நடத்தப்படும்... தங்க தமிழ்ச்செல்வன் மிரட்டல்!
தகுதி நீக்க எம்எல்ஏக்கள் வழக்கை வாபஸ் பெற்றால் சிறப்பாக இருக்கும் என தினகரனின் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
தேனி: தகுதி நீக்க எம்எல்ஏக்கள் வழக்கை வாபஸ் பெற்றால் சிறப்பாக இருக்கும் என தினகரனின் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். இடைத்தேர்தல் நடத்தாவிடில் 3 லட்சம் பேரை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் நடைபெற்ற கருத்து கேட்கும் கூட்டத்தில் தங்கதமிழ்ச்செல்வன் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது, மத்திய, மாநில அரசு நீதிமன்றத்தை விலைக்கு வாங்கி விட்டது.
தகுதி நீக்க வழக்கில் பாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வழக்கை வாபஸ் பெற்று கொண்டு எனது தொகுதியில் இடைத்தேர்தலில் போட்டியிடுவேன்.
எம்எல்ஏ பதவி தேவையில்லை
மக்களுக்கு பயன்படாத எம்எல்ஏ பதவி எனக்கு தேவையில்லை. தங்களை தகுதிநீக்கம் செய்தது செல்லும் என்றாலும், செல்லாது என்றாலும் அரசுக்கு நெருக்கடி தான் என தெரிவித்துள்ளார்.
காலம் தாழ்த்தும் முயற்சி
ஒரே மாதிரியான தீர்ப்பு வழங்காமல் நீதிபதிகள் ஆளுக்கொரு தீர்ப்பு வழங்கிவிட்டனர். இரு நீதிபதிகள் மாறுப்பட்ட தீர்ப்பை கூறியுள்ளதால் இது வழக்கை காலம் தாழ்த்தும் முயற்சியாக உள்ளது.
தினகரனிடம் சொல்விட்டேன்
மூன்றாவது நீதிபதியை எப்போது நியமிப்பார்கள், எப்போது இறுதி தீர்ப்பு வரும் என்று தெரியாது. ஆகையால் வழக்கை வாபஸ் பெறுவதில் உறுதியாக உள்ளேன். என் முடிவை தினகரனிடம் சொல்விட்டேன், அவரும் ஏற்றுக்கொண்டார்.
தாய் கழகத்தில் இணைவோம்?
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைந்தால் வரவேற்கிறேன் பாராட்டுகிறேன் என்ற முதல்வர் கூறிய கருத்துக்கும் தங்க.தமிழ்ச்செல்வன் பதிலளித்துள்ளார். எங்களின் முதல் கோரிக்கையே முதல்வரை மாற்ற வேண்டும் என்பது தான், அப்படி இருக்கும் போது நாங்கள் எப்படி தாய் கழகத்தில் இணைவோம்?
ஜனநாயகம் 100% இல்லை
18 எம்.எல்.ஏ.க்களின் தொகுதி காலியாக உள்ளது என்று அறிவித்த பிறகு நாங்கள் எதற்கு அதிமுகவில் இணைய வேண்டும்? நாட்டில் ஜனநாயகம் 100 சதவீதம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
சிறப்பாக இருக்கும்
இதர 17 எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தி வழக்கு பற்றி முடிவு எடுக்கப்படும். 17 எம்.எல்.ஏ.க்களும் வழக்கை வாபஸ் பெற்றால் சிறப்பாக இருக்கும்.
போராட்டம் நடத்தப்படும்
ஆண்டிபட்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த வேண்டும். இடைத்தேர்தல் நடத்தாவிடில் 3 லட்சம் பேரை திரட்டி போராட்டம் நடத்தப்படும்.
பொறுப்பிலிருந்து விலகவில்லை
கட்சி மாறி தாங்கள் யாரும் வாக்களிக்கவில்லை. அதேபோல் கட்சி உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகவில்லை. இவ்வாறு தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.