கூடுதல் படையுடன் சென்றிருந்தால் உயிரிழப்பை தவிர்த்திருக்கலாம்.. போலீஸ் அதிகாரி பரபரப்பு தகவல்!
கொள்ளையர்களை பிடிக்க நள்ளிரவில் சுற்றி வளைத்திருக்கக்கூடாது என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: கொள்ளையர்களை பிடிக்க நள்ளிரவில் சுற்றி வளைத்திருக்கக்கூடாது என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சென்னை கொளத்தூர் நகைக்கடையில் கொள்ளையடித்தவர்களை பிடிக்க சென்ற காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த சம்பவம் காவல்துறையினர் மட்டுமின்றி பொதுமக்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த பெரியபாண்டியனின் குடும்பத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு கோடி ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளார்.
அவரது மகன்களின் படிப்பு செலவை அரசே ஏற்கும் என்று அறிவித்த முதல்வர் பெரியபாண்டியன் கொலை தொடர்பாக உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.
போலீஸ் அதிகாரி தகவல்
இந்நிலையில் வெளிமாநிலங்களுக்கு குற்றவாளிகளை பிடிக்க செல்லும் போது போலீஸார் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் போலீஸ் அதிகாரி ஒருவர் பரபரப்பு தகவல்களை தெரிவித்துள்ளார்.
சர்வ சாதாரணமானது
ராஜஸ்தான், பீகார் போன்ற வடமாநிலங்களில் துப்பாக்கி நடமாட்டம் மிகவும் சர்வ சாதாரணமானது என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். வெளி மாநிலங்களுக்கு குற்றவாளிகளை பிடிக்க செல்லும் போது மேற்கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்து முன்கூட்டியே திட்டமிட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
யாரை போய் சந்திக்க வேண்டும்
வெளி மாநில போலீஸ் அதிகாரிகளுடன் தமிழக உயர் போலீஸ் அதிகாரிகள் தொடர்பு கொண்டு பேச வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். வெளி மாநிலத்திற்கு சென்ற பின்னர் யாரை போய் சந்திக்க வேண்டும் என்பது தமிழகத்தில் இருந்து புறப்படுவதற்கு முன்பே உறுதி செய்யப்பட்டு விடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்திருக்க மாட்டார்
இதன்படி தனிப்படை போலீசார் திட்டமிட்டு அங்கு சென்று குற்றவாளிகளை பிடித்து வருவார்கள் என்ற அவர், ராஜஸ்தான் சென்ற தனிப்படையினர் அதுபோன்று திட்டமிட்டு அங்கு சென்றிருந்தால் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் உயிரிழந்திருக்க மாட்டார் என்றும் அவர் கூறினார்.
கூடுதல் படையுடன்
வெளிமாநிலங்களை பொறுத்தவரையில் குறிப்பாக ராஜஸ்தான், பீகார் போன்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள் போலீஸ் என்று கூட பார்க்காமல் திடீர் தாக்குதல்களில் ஈடுபடக்கூடியவர்கள். எனவே இதுபற்றிய தகவல்களை உள்ளூர் போலீசார் துணையுடன் முன்கூட்டியே சேகரித்து கூடுதல் படையை கேட்டு பெற்றிருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
தவிர்த்திருக்க முடியும்
தேவையான அளவிற்கு போலீஸ் படையுடன் கொள்ளையர்கள் இருக்கும் இடத்தை நெருங்கி இருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் கொள்ளையர்களை உயிருடன் பிடித்திருக்கலாம் என்றும் இது போன்ற அசம்பாவிதங்களையும் தவிர்த்திருக்க முடியும் என்றும் அந்த அதிகாரி கூறினார்.