ஊதிய உயர்வு வேண்டாம் என்றால் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு கொடுத்துவிடுங்கள்: ஓபிஎஸ் பொளேர்!
ஊதிய ஊயர்வு வேண்டாம் என்றால் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு கொடுத்துவிடுங்கள் என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஊதிய ஊயர்வு வேண்டாம் என்றால் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு கொடுத்துவிடுங்கள் என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 8ஆம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. இன்றைய கூட்டத்தொடரின் போது பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் ஆளும் கட்சியினருக்கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையே காராசார விவாதங்களும் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
மசோதா நிறைவேற்றம்
முன்னதாக எம்எல்ஏக்களின் ஊதியம் உயர்த்தப்படுவதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு திமுக மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.
கடும் வாக்குவாதம்
எம்எல்ஏக்கள் ஊதிய உயர்வு தொடர்பான விவாதத்தின் போது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கும் கடுமையான வாக்குவாதம் நடைபெற்றது.
கடுமையான நிதி நெருக்கடி
எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசும்போது, எம்எல்ஏக்களுக்கு சம்பள உயர்வு தேவையா? என சபாநாயகரிடம் கடிதம் வழங்குவோம் என்றார். திமுக எம்எல்ஏக்களுக்கு சம்பள உயர்வு தேவையில்லை என்றார்.
தமிழகம் கடுமையான நிதி நெருக்கடியில் உள்ளபோது எம்.எல்.ஏ.க்களுக்கு ஊதிய உயர்வு தேவைதானா? என்றும் கேள்வி எழுப்பினார்.
ஊதியத்தை தரத் தயார்
போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்னை தீரும் வரை உயர்த்தப்பட்ட சம்பளத்தை பெறமாட்டோம் என்றும் அவர் கூறினார். போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க நிதி தேவைப்பட்டால் எங்கள் ஊதியத்தை தரத் தயார் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.
தொகுப்பு வீட்டில் எம்எல்ஏ
இதற்கு பதிலளித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
எம்.எல்.ஏ.க்களின் கருத்துகள், கோரிக்கைகள் அடிப்படையிலேயே ஊதிய உயர்வு அளிக்கப்பட்டது என்றார். மேலும் அனைத்து எம்எல்ஏக்களும் வசதியாக இல்லை என்ற அவர் ஆற்காடு அதிமுக எம்எல்ஏ சித்ரா இன்னும் தொகுப்பு வீட்டில் வசித்து வருகிறார் என்று கூறினார்.
முதல்வர் நிவாரண நிதிக்கு..
கடந்த 6 மாதமாக சம்பள உயர்வு பற்றி பேசாத ஸ்டாலின், தற்போது பேசுவது ஏன் என கேள்வி எழுப்பினார். மேலும் ஊதிய உயர்வு தேவையில்லை என்றால் முதல்வர் பொது நிவாரண நிதியில் ஒப்படைத்து விடுங்கள் என்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
நாமே காப்பாற்றாவிட்டால்?
இதைத்தொடர்ந்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நமது எம்எல்ஏக்ளை நாமே காப்பாற்றாவிட்டால், வேறு யார் காப்பாற்றுவது என கேள்வி எழுப்பினார்.
கையெழுத்து போட்டுள்ளோம்
இதையடுத்து பேசிய ஸ்டாலின் உயர்த்தப்பட்ட ஊதியத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்குகிறோம் என்றார். மேலும் சம்பள உயர்வு தேவையில்லை என கையெழுத்து போட்டுள்ளோம் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.
சட்டசபையில் அனல்பறந்தது
துணை முதல்வர் ஓபிஎஸும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினும் மாறி மாறி பேசியதால் சட்டசபையில் அனல்பறந்தது. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளையும் மீறி சட்டசபையில் எம்எல்ஏக்கள் ஊதிய உயர்வு மசோதா நிறைவேற்றப்பட்டது.