ஐஎஸ்ஐஎஸ்ஸில் உங்க நண்பர் யாராவது இருக்காரா?: முதல்ல அவர் நட்பை கட் பண்ணுங்க
சென்னை: உங்களின் நண்பர் யாராவது ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ந்து துருக்கி அல்லது சிரியாவில் போராடிக் கொண்டிருந்தால் அவரை கண்டுகொள்ளாதீர்கள்.
சிரியா அல்லது துருக்கியில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு சார்பில் போராடிக் கொண்டிருக்கும் உங்கள் நண்பருடன் அடிக்கடி சாட் செய்தால் உளவுத் துறை உங்களைத் தேடி வரும். அதுவும் நீங்கள் வெளிநாட்டில் இருந்தால் நீங்கள் நாடு கடத்தப்படுவீர்கள்.
பள்ளிகாலத்து நட்பை தொடர நினைத்து தான் அமீரகத்தில் இருந்த 8 இந்தியர்கள் தங்களின் நண்பர் ரியாத்துடன் தொடர்பில் இருந்து நாடு கடத்தப்பட்டனர். ரியாத் துருக்கியில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு சார்பில் போராடி வருகிறார்.
கேரளாவைச் சேர்ந்த அந்த 8 பேரும் சமூக வலைதளங்கள் மூலம் ரியாத்துடன் தொடர்பில் இருந்து அமீரக அதிகாரிகளின் கண்ணில்பட்டு நாடு கடத்தப்பட்டனர். நாடு கடத்தப்பட்ட அனைவரும் அமீரகத்தில் உள்ள ராசல் கைமாவில் ரியாத்துடன் படித்தவர்கள். ரியாத் அமீரகத்தில் இருந்து துருக்கி சென்று ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ந்தார். 24 வயதாகும் ரியாத் துருக்கி சென்ற பிறகும் தனது பள்ளி நண்பர்களுடன் தொடர்பில் இருந்தார்.
அவர் ஏப்ரல் மாதம் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ந்ததில் இருந்து அந்த 8 நண்பர்களுடன் சமூக வலைதளங்கள் மூலம் தொடர்பில் இருந்தார். நாடு திரும்பிய அந்த 8 பேரும் போலீசாரிடம் கூறுகையில், நண்பர் எங்கு இருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் தான் அவருடன் தொடர்பில் இருந்தோம். அதை தவிர வேறு ஒன்றும் இல்லை. அவரை துருக்கியில் இருந்து திரும்பி வந்துவிடுமாறு கூறினோம் என்றனர்.
ரியாத் வங்கதேசத்தை சேர்ந்த நண்பர் ஒருவருடன் கடந்த ஏப்ரல் மாதம் மாயமாகினார். அவர் துருக்கிக்கு சென்றுள்ளார் என்று தெரிய வந்ததும் போலீசார் அவரின் நண்பர்களை கண்காணிக்கத் துவங்கினர். ரியாத் மீது வழக்குப்பதிவு செய்துள்ள கேரளா போலீசார் அவரின் நண்பர்கள் 8 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தினர்.