அடிமைகள் இருப்பார்கள் என்று நினைத்தால் சகுனிகளும் இருக்கிறார்கள்..ராமதாஸ் யாரை சொல்கிறார் தெரியுதா?
மதுரையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு கொடியேற்று விழாவுக்கு ஓ.பி.எஸ்ஸை அழைக்காமல் அவமதிப்பு செய்தது குறித்து ராமதாஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சென்னை: மதுரையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு கொடியேற்று விழாவுக்கு ஓ.பி.எஸ்ஸை அழைக்காமல் அவமதிப்பு செய்தது குறித்து ராமதாஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மதுரையை அடுத்து திருமங்கலம் அருகே உள்ள தோப்பூரில் இன்று அதிமுகவின் முப்பெரும் விழா நடைபெற்றது. அதாவது ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா, எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா மற்றும் இரட்டை இலை சின்னம் மீட்கப்பட்ட வெற்றியை கொண்டாடுவதற்காக இந்த விழா நடைபெற்றது.
ஆனால் இந்த விழாவிற்கு ஓ.பன்னீர்செல்வத்திற்கோ, அவரது ஆதரவாளர்களுக்கோ அழைப்பு விடுக்கப்படவில்லை. இதனால் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கொடி கம்பத்தில் கல்வெட்டு
இந்த விழாவிற்காக 100 அடி உயர கொடிகம்பத்தில் அதிமுகவின் கொடி நிறுவப்பட்டது. இந்த கொடி கம்பத்தில் கல்வெட்டுகள் வைக்கப்பட்டுள்ளது.
இந்த கல்வெட்டில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுகவின் வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பெயரும், அதேபோன்று புறநகர் பகுதியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் பெயரும் இடம்பெற்றுள்ளது.
பக்கவாட்டில் ஓபிஎஸ் பெயர்
ஆனால் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் பெயர் கல்வெட்டில் இல்லாமல் பக்கவாட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டு நேற்று முதல் இல்லை என்றும், இன்று காலையில் வைக்கப்பட்டது என்றும் இங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
தொண்டர்கள் பங்கேற்கவில்லை
இதுமட்டுமல்லாமல் ஓ.பி.எஸ் அணியைச் சேர்ந்த தொண்டர்கள் யாரும் இந்த விழாவில் பங்கேற்கவி்ல்லை. குறிப்பாக ஆர்.பி.உதயகுமார் நடத்தும் எந்தவொரு விழாவிலும் ஓ.பி.எஸ்க்கு அழைப்பு விடுவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
ஓபிஎஸ்க்கு அவமதிப்பு..
ஏற்கனவே நெல்லை மற்றும் தேனியில் நடைபெற்ற நூற்றாண்டு விழாவிற்கும், உசிலம்பட்டி மற்றும் திருமங்களத்தில் நடைபெற்ற தேவர் சிலைக்கு மாலை அணிவிக்கும் விழாவின் போதும் ஓ.பி.எஸ்க்கு அழைப்பு விடுவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
வெட்ட வெளிச்சமான மோதல்
இந்நிலையில் இன்று ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணிகளுக்கு இடையேயான மோதல் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இரட்டை இலைச்சின்னம் பெறப்பட்டுள்ள நிலையில் ஓபிஎஸ் ஈபிஎஸ் அணிகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள இந்த மோதல் தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சகுனிகளும் இருக்கிறார்களே!
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது மதுரையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு கொடியேற்று விழாவுக்கு ஓ.பி.எஸ்ஸை அழைக்காமல் அவமதிப்பு என்ற செய்தியை பதிவிட்ட அவர், அங்கு அடிமைகள் மட்டுமே இருப்பார்கள் என நினைத்தால் சகுனிகளும் இருக்கிறார்களே! என எடப்பாடி அணியை சாடியுள்ளார்.