கடப்பாரையை போட்டு நெம்பினால் கூட ஆட்சியை அசைக்க முடியாது: ஸ்டாலினுக்கு எடப்பாடியார் பதில்
கோவை: கடப்பாரையை போட்டு நெம்பினால் கூட அதிமுக ஆட்சியை அசைக்க முடியாது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திமுக செயல்தலைவர் ஸ்டாலினுக்கு பதில் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு கோவை தொண்டாமுத்தூரில் 70 ஜோடிகளுக்கு அதிமுக சார்பில் திருமணம் செய்து வைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விழாவில் பேசினார். அப்போது சொடக்கு போட்டால் அதிமுக ஆட்சியை கவிழும் என்று ஈரோடு மாநாட்டில் ஸ்டாலின் பேசியதற்கு அவர் பதிலடி கொடுத்தார்.
கடப்பாரையை போட்டு நெம்பினால்
கடப்பாரையை போட்டு நெம்பினால் கூட அதிமுக ஆட்சியை ஒன்றும் செய்ய முடியாது என அவர் கூறினார். மேலும் அதிமுக ஆட்சியை கவிழ்க்கலாம் என்ற திமுகவின் கனவு நிறைவேறாது என்றார்.
இதுவே சான்று
ஸ்டாலினின் பகல் கனவு பலிக்காது என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். அதிமுக மத சார்பற்ற அரசு என்பதற்கு இந்த திருமண நிகழ்ச்சியே சான்று என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.
துரும்பை கூட கிள்ளிபோடவில்லை
14 ஆண்டுகள் மத்தியில் கூட்டணியில் இருந்த திமுக காவிரி மேலண்மை வாரியத்துக்காக ஒரு துரும்பை கூட கிள்ளிப்போடவில்லை என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.
அதிகாரம் ஒன்றே குறிக்கோள்
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்றும் அவர் கூறினார். திமுகவுக்கு அதிகாரம் ஒன்றே குறிக்கோள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டினார்.