தஞ்சை பெரிய கோவிலில் பொன் மாணிக்கவேல் ஏன் திடீர் ஆய்வு. பரபரப்பு பின்னணி!
தஞ்சை: 60 ஆண்டுகள் பழமைவாய்ந்த ராஜராஜ சோழன், உலக மாதேவி சிலைகள் தங்களுக்கு சொந்தமானவை என விஞ்ஞானி சாராபாயின் சகோதரி உரிமை கொண்டாடி வழக்கு தொடர்ந்ததை அடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழகத்தில் சிலை கடத்தல் விவகாரம் தலைத்தூக்கியுள்ளது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் ஆங்காங்கே சோதனை செய்து காணாமல் போன சிலைகளை மீட்டு வருகிறார்.
அதன்படி அவரது தலைமையிலான குழுவினர் சென்னை சைதாப்பேட்டையில் ரன்வீர்ஷாவின் வீட்டில் சோதனை நடைபெற்றது. அப்போது அங்கு காட்சிப்படுத்தப்பட்ட 89 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில் ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் தஞ்சை பெரிய கோயிலில் ஆய்வு நடத்தி வருகின்றனர். சுமார் 50 அதிகாரிகள் கொண்ட குழுவினர் பக்தர்களை வெளியேற்றிவிட்டு ஆய்வு செய்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த 60 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன ராஜராஜ சோழன் மற்றும் உலக மாதேவி சிலைகள் மீட்கப்பட்டன. இந்த சிலைகள் தஞ்சை பெரிய கோயிலுக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. எனினும் மீட்கப்பட்ட சிலைகள் தங்களுடையது என விஞ்ஞானி சாராபாய் சகோதரி வழக்கு தொடர்ந்துள்ளார்.
வழக்கில் பதிலளிக்க அவகாசம் கேட்ட நிலையில் தஞ்சை கோயிலில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.