சென்னை ஐ.ஐ.டிக்கு தொடரும் எதிர்ப்பு: - திருச்சி, திருவாரூர், மதுரையில் போராட்டம்!!
திருச்சி: அம்பேத்கர்- பெரியார் பெயரிலான மாணவர் வாசகர் வட்டத்துக்கு தடை விதித்ததைக் கண்டித்து தமிழகத்தில் 4வது நாளாக போராட்டம் நீடிக்கிறது. திருச்சியில் தேசிய தொழில்நுட்பக் கழகமான என்.ஐ.டியை முற்றுகையிட்டு பல்வேறு அமைப்புகள் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின.
சென்னை ஐ.ஐ.டி.யில் உள்ள அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம் என்ற மாணவர் அமைப்பு பிரதமர் நரேந்திர மோடியை விமர்சனம் செய்ததாக கூறி அதன் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது. இந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் பரபரப்பையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவின் பல்வேறு இடங்களில் மாணவர் மற்றும் மனித உரிமை அமைப்புகள் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் இந்த உத்தரவை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றன.
தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக தொடர்ச்சியாக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந் நிலையில் இன்று 4வது நாளும் இப்போராட்டம் நீடித்தது.
திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகமான என்.ஐ.டி.யை முற்றுகையிட்டு மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர ஜனநாயக தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தின.
மத்திய அரசுக்கு சொந்தமான இந்த நிறுவனத்தின் நுழைவாயிலை இழுத்துப் பூட்டி தங்களது எதிர்ப்பையும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் மதுரை, திருவாரூர் உள்ளிட்ட இடங்களிலும் இன்றும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.