டெங்கு மரணங்கள்: சென்னை ஐஐடி மாணவர் உட்பட ஒரே நாளில் 3 பேர் பலி
டெங்கு காய்ச்சல் காரணமாக ஐஐடி மாணவர் பிரேம் அவினாஷ் நேற்று இரவு மரணமடைந்துள்ளார். தமிழகத்தில் காய்ச்சல் காரணமாக நேற்று ஒரே நாளில் 3 பேர் மரணமடைந்துள்ளனர்.
சென்னை: ஐஐடி மாணவர் பிரேம் அவினாஷ் ,21. விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த இவர் சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார்.
ஐஐடி வளாகத்தில் இருந்த கிளினிக்கில் சிகிச்சை பெற்று வந்த இவர், மேல்சிகிச்சைக்காக, வேளச்சேரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டெங்கு காய்ச்சல் என தெரியவந்தது. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.
சிவகங்கை மாவட்டம், ராஜகம்பீரம் கிராமத்தைச் சேர்ந்த பாலசண்முகம் என்பவரது மனைவி பிரியா. கடந்த 15 நாள்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.
அங்கு இரத்த பரிசோதனை செய்ததில் அவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே கவிதா என்ற இளம் பெண் மர்ம காய்ச்சலுக்கு பலியானார். கோவை தனியார் மருத்துவமனையில் 30 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் காய்ச்சலுக்கு கடந்த ஒரு வாரத்திற்குள் அடுத்தடுத்து 2 குழந்தைகள் உயிரிழந்தனர்.
தமிழகத்தில் தற்போது வரை டெங்கு காய்ச்சலுக்கு 15 பேர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் டெங்குவை தவிர்த்து மற்ற காய்ச்சலுக்கு 32 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சிக்கன் குன்யாவுக்கு தமிழகத்தில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் கடந்த சில தினங்களாக தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் மரணங்கள் அதிகரித்து வருகின்றன.