சென்னை ஐஐடி மாணவ-மாணவிகள் கட்டி பிடித்து போராட்டம்.. ஏன் தெரியுமா?
சென்னை ஐஐடியில் மாணவ-மாணவிகள் கட்டிபிடித்து போராட்டம் நடத்தி 'மாரல் போலீஸ்' கலாசாரத்திற்கு எதிராக எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
Recommended Video
சென்னை: ஐஐடியில் மாணவ-மாணவிகள் கட்டிபிடித்து போராட்டம் நடத்தி 'மாரல் போலீஸ்' கலாசாரத்திற்கு எதிராக எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
சென்னை ஐஐடியை பொறுத்தளவில் பாலியல் பேதமின்றி, மாணவ-மாணவிகள் நெருக்கமாக பழகிவருகிறார்கள். சமீபத்தில் ஐஐடி கேண்டீனில் இரு மாணவ-மாணவிகள் சாப்பிட்டுவிட்டு கிளம்பும்போது, கட்டி பிடித்துவிட்டு (hug) கிளம்பியுள்ளனர். இது வழக்கமாக நடைபெறுவதுதானாம். ஆனால், ஐஐடி ஊழியர் ஒருவர் அதை செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார்.
இதுபற்றி அந்த மாணவ, மாணவிகள் விளக்கம் கேட்டபோது, "இப்படியெல்லாம் நடந்து கொள்ள கூடாது என எனது குழந்தைகளுக்கு காண்பித்து வளர்ப்பதற்காக இந்த வீடியோவை எடுத்தேன்" என்று கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த ஐஐடி மாணவ, மாணவிகள், கட்டி பிடிக்கும் போராட்டத்தில் இறங்கிவிட்டனர்.
இதுகுறித்து ஐஸ்வர்யா என்ற மாணவி கூறுகையில், "அடுத்தவர்களை போட்டோ எடுத்ததே தவறு, அதிலும், கட்டி பிடித்த மாணவ, மாணவிகளையே தவறும் சொல்லியுள்ளார். இது மாரல் போலீஸ் கலாச்சாரம். இதை அனுமதிக்க மாட்டோம். எனவே கட்டி பிடித்து எங்கள் எதிர்ப்பை பதிவு செய்கிறோம்" என்றார்.
சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கட்டி பிடிக்கும் போராட்டத்தில் பங்கேற்றனர்.