பூகம்பம் அடுத்து எப்போ வரும்?.. ஆய்வு செய்கிறது சென்னை ஐஐடி குழு
சென்னை: பூமிக்கு அடியில் ஏற்படும் நில அதிர்வுகளை முன்கூட்டியே கணிப்பது குறித்த சாத்தியக் கூறுகள் குறித்து சென்னை ஐஐடியைச் சேர்ந்த ஆய்வுக் குழு ஒன்று ஆய்வில் ஈடுபட்டுள்ளது. அதேபோல விண்வெளியில் உள்ள துகள்கள் குறித்த ஆய்வையும் சென்னை ஐஐடி ஆய்வுக் குழு முடுக்கி விட்டுள்ளது.
பூகம்பம் தொடர்பாகவும், விண்வெளித் துகள்கள் தொடர்பாகவும் பல முறை கோட்பாடுகள் கூறப்பட்டுள்ளன. ஆனால் அவை அனைத்துமே பெரும்பாலும் சரிவராமலேயே போயுள்ளன.
குறிப்பாக நில அதிர்வுகளை கணிக்க முடியுமா என்பது குறித்து ஆய்வு உலகின் பல பகுதிகளிலும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் உள்ளன. ஆனால் அதில் உருப்படியான எந்த முன்னேற்றத்தையும் நாம் இதுவரை காணவில்லை.
ரூ. 3 கோடி செலவில்...
ஆனால் சென்னை ஐஐடியைச் சேர்ந்த மாணவர் குழு ஒன்று ரூ. 3 கோடி பட்ஜெட்டில் ஒரு திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். இது நில அதிர்வுகளை முன்கூட்டியே கணிப்பது தொடர்பான ஆய்வாகும்.
நானோ செயற்கைக்கோள்...
இதற்காக ஒரு நானோ செயற்கைக் கோளை இவர்கள் உருவாக்கியுள்ளனர். அதன் பெயர் ஐஐடிஎம்சாட் என்பதாகும். ஒரு பேலோடுடன் அடுத்த ஆண்டு மத்தியில் இது ஏவப்படவுள்ளது.
ஆய்வு...
பூமியின் சுற்றுப் பாதைக்குக் கீழே நிலை நிறுத்தப்படவுள்ள இந்த செயற்கைக் கோளானது, விண்வெளியில் உள்ள துகள்களை ஆராயவுள்ளது. plastic scintillation detector மூலமாக இந்த ஆய்வை அது நடத்தவுள்ளது.
விண்வெளியில் உள்ள துகள்கள்...
இந்த துகள்கள் (அதாவது புரோட்டான்களும், எலக்ட்ரான்களும்) வேன் ஆலன் பெல்ட் பகுதியில் பூமியை சுற்றி வரும்போது ஒளிரும். அப்போது இந்தத் துகள்கள் குறித்து இந்தக் குழு ஆராயவுள்ளது.
கதிர்வீச்சுப் பொருள்...
வேன் ஆலன் பெல்ட் என்பது கதிர்வீச்சுப் பகுதியாகும். வேகமாக நகரும் துகள்கள் இங்கு உள்ளன. இது சூரியனிலிருந்து வரும் துகள்களையும், சக்தியையும் உள்ளிழுத்துக் கொள்ளும்.
ஆயுள்...
இந்த வேன் ஆலன் பெல்ட் பகுதியின் உட்புறமானது, பூமியிலிருந்து 650 கிலோமீட்டர் உயரத்தில் உள்ளது. அடுத்த நிலை பெல்ட்ட் பகுதியானது 9600 கிலோமீட்டர் உயரம் வரை நீண்டிருக்கிறது. அதிபட்சம் ஒரு வருட காலம் இந்த செயற்கைக் கோள் பணியில் இருக்கும்.
இறுதிகட்ட சோதனைகள்...
இதன் மொத்த எடையே 12 கிலோதான். தற்போது இது சோதனை அளவில் உள்ளது. ஒரு மாதத்தில் இதை பொருத்தி, இறுதிக் கட்ட சோதனைகளை இஸ்ரோவில் நடத்தவுள்ளனர்.
நோக்கம்...
இந்த செயற்கைக் கோளின் முக்கிய நோக்கமே, டெக்டானிக் பிளேட்டுகள் எனப்படும் நிலத் தட்டுக்கள் மீது ஏற்படும் அழுத்தம் குறித்து ஆராய்வதுதான். நிலநடுக்கத்தின்போது வெளிப்படும் குறைந்த அதிர்வலைகள் வேன் ஆலன் பெல்ட்ட பகுதியுடன் தொடர்பு கொள்வதாக நம்மப்படுகிறது. இதனால் நில நடுக்கத்தின்போது வேன் ஆலன் பெல்ட் பகுதியிலும் உள்ள துகள்களிலும் மாற்றம் ஏற்படலாம். எனவே அதை வைத்து நிலநடுக்கத்தை நம்மால் முன்கூட்டியே உணர முடியுமா என்பதே இந்த ஆய்வின் முக்கிய அம்சமாகும்.
நம்பிக்கை...
இந்த கொள்கையை இதுவரை விஞ்ஞான உலகம் ஏற்றுக் கொள்ளவில்லை. இருப்பினும் இது நிரூபிக்கப்பட்டால் மிகப் பெரிய புரட்சியே ஏற்படலாம். இதுகுறித்து இந்தத் திட்டத்தின் தலைவரான டேவிட் கோவில் பிள்ளை கூறுகையில், ‘ஐஐடிஎம்சாட் வேன் ஆலன் பெல்ட் பகுதி துகள்களை ஆராய்ந்து புதிய முடிவுகளைத் தரும் என்ற நம்பிக்கையில் உள்ளோம்' என்றார்.