சென்னை ஐ.ஐ.டி முன்பு தடையை மீறி மாட்டிறைச்சி உண்ணும் போராட்டம்.. மாணவர் அமைப்பினர் கைது
ஐஐடி வளாகம் முன்பு தடையை மீறி மாட்டிறைச்சியை சாப்பிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் அமைப்பினர் 30 பேர் போலீசாரல் கைது செய்யப்பட்டனர்.
சென்னை: சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் மாட்டிறைச்சித் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்திருந்த மாணவர் சூரஜ் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனை கண்டித்து தடையை மீறி மாட்டிறைச்சியை சாப்பிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் அமைப்பினர் போலீசாரல் கைது செய்யப்பட்டனர்.
சென்னை ஐ.ஐ.டி.,யில் மாட்டுக்கறி உண்ணும் நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. இடதுசாரி அமைப்பு உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் இதில் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், மாட்டுக்கறி விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த ஆய்வு மாணவர் சூரஜை, சென்னை ஐஐடி-யில் பயிலும் மற்றொரு பிரிவினர் கொடூரமாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் சூரஜின் வலது கண் கடுமையாக காயம் அடைந்துள்ளது. உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.
இந்நிலையில் மாணவர் சூரஜை தாக்கியவர்களை மீது நடவடிக்கை எடுக்க கோரி மாணவ அமைப்பினர் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட கேம்பஸ் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா மாணவ அமைப்பினர் தடையை மீறி மாட்டிறைச்சி உண்டும் எதிர்ப்பை தெரிவித்தனர். இதையடுத்து அந்த அமைப்பைச் சேர்ந்த 30 பேர் கைது செய்யப்ப்டடுள்ளனர். இதனால் அங்கு பதட்டமான சூழல் நிலவியது. இதையடுத்து ஐ.ஐ.டி.வளாகத்தில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.