பாஜக கழுத்தில் துண்டைப் போட்டு "குண்டக்க மண்டக்க" சீட் கேட்கும் பாரிவேந்தர்!
சென்னை: பெரிய்ய பெரிய்ய கட்சிக்காக தேவுடு காத்து கடைசியில் பூந்தி கூட கிடைக்காமல் ஏமாந்து போய் நிற்கும் பாஜக, கூட இருக்கும் குட்டியூண்டு கட்சிகள் கேட்கும் சீட்டுகளைப் பார்த்து செமையாக டென்ஷனாகி வருகிறதாம்.
பாஜக கூட்டணியில் இப்போது யார் யார் இருக்கிறார்கள் என்பதே பாஜகவுக்குத் தெளிவாகத் தெரியவில்லை. அந்த அளவுக்கு பாஜக முகாம் குழம்பி வெதும்பிப் போய்க் கிடக்கிறது.
தற்போதைய நிலையில் பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சி, ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக் கட்சி, பாஸ்வானின் லோக் ஜனசக்தி உள்ளிட்ட ரொம்ப ரொம்ப குட்டிக் கட்சிகள்தான் பாஜகவுடன் உள்ளன. ஆனால் அவர்கள் கேட்கும் சீட்டோ அடேங்கப்போ என்று அயர்ச்சியை வரவைக்கும் வகையில் உள்ளதாம்.
தேவநாதன் போட்ட போடு
பாஜகவுடன் இதற்கு முன்பு இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் தலைவரான தேவநாதன் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசியுள்ளார். 30 சீட் கண்டிப்பாக வேண்டும் என்று கண்டிஷனாக கூறி விட்டாராம் தேவா.
டபாய்க்கும் பாரிவேந்தர்
மறுபக்கம் பாரிவேந்தர், எங்களது கட்சி முன்பை விட நன்கு வளர்ந்து விட்டது. கணிசமான வாக்குகளை வைத்துள்ளோம். எனவே 90 சீட் கண்டிப்பாக தேவை என்று கூறி விட்டாராம்.
ஷாக்கான தமிழிசை
பாரிவேந்தருடன் நேற்றுதான் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அவர் கேட்டதைப் பார்த்து தமிழிசையும், பொன் ராதாகிருஷ்ணனும் அதிர்ச்சி ஆகி விட்டார்களாம்.
இவங்களுக்கே இவ்வளவு கொடுத்தால்
பாஜகவினர் குறைந்தது 150 தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறார்களாம். ஆனால் கூட்டணிக் கட்சிகளே தாறுமாறாக கேட்பதால் குழப்பாகியுள்ளனராம்.
விட்டால் போயிருவாங்களே!
முடியாது என்று கூறி விட்டால் இருப்பவர்களும் கிளம்பிப் போய் மக்கள் நலக் கூட்டணியில் சேர்ந்து விடும் அபாயம் உள்ளது. இருப்பவர்களையும் விட்டு விட்டால் தனித்துப் போட்டியிடும் அவல நிலைக்குத் தள்ளப்படலாம என்பதால் பாஜகவினர் நிதானமாக பேசி வருகிறார்களாம்.
ஆனாலும் பாஜக நிலை ரொம்பத்தான் பரிதாபம்!