பாரத நாட்டுக்கு நல்ல திட்டங்கள், முன்னேற்றத் திட்டங்கள், வளர்ச்சித் திட்டங்கள்.... இல.கணேசன் பேச்சு
கரூர்: நிலம் கையகபடுத்தும் வரைவு மசோதா திட்டத்தின் நோக்கமே பாரத நாட்டிற்கு ஏராளமான நல்ல திட்டங்கள், முன்னேற்ற திட்டங்கள், வளர்ச்சி திட்டங்கள் கொண்டு வந்து பாரத நாட்டை பெரிய வல்லரசாக ஆக்கவேண்டும் என்பதே என்று பாஜக தேசிய செயலாளர் இல கணேசன் கூறியுள்ளார்.
கரூர் வந்த அவர் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டார். முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்தார் கணேசன்.
அப்போது அவர் பேசுகையில், இன்று தியாகிகள் தினத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இது மட்டுமில்லாமல் சென்னையில் அமைச்சர்கள் சற்று நேரம் மொளன அஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினர். ஆனால் அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் அந்த இடமே வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் அந்த பகுதியில் உள்ள உண்மையான தியாகிகள் கூட கலந்து கொள்ள இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
தியாகிகளை பற்றி வருங்கால சந்ததியினர் அறிந்து கொள்ளும் வகையில் பள்ளிகூடங்களில் ஒருமணிநேரம் தியாகிகள் பற்றி சொற்பொழிவுகள் நடத்தப்பட வேண்டும்.
ஜாதிவாரி கணக்கெடுப்பது சிரம்மான காரியம். அதன் முடிவுகளை வெளியிட வேண்டும் என எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது நமது பாரத நாட்டில் 46 லட்சம் ஜாதிகள் உள்ளதாக தெரியவருகிறது. ஜாதி வாரி கணக்கெடுப்பு பற்றி ஆய்வு செய்து அதன் அடிப்படையில் சமூக ரீதியாக மாற்றங்கள் கொண்டு வந்து திட்டங்கள் நிறைவேற்றப்படும்.
நிலம் கையகப்படுத்தும் வரைவு மசோதா திட்டத்தின் நோக்கமே பாரத நாட்டிற்கு ஏராளமான நல்ல திட்டங்கள், முன்னேற்ற திட்டங்கள், வளர்ச்சி திட்டங்கள் கொண்டு வந்து பாரத நாட்டை பெரிய வல்லரசாக ஆக்கவேண்டும் என்கிற நோக்கமே. ஆனால் ராகுல்காந்தி ஒரு அங்குலம் நிலம் கூட நிலம் கையபடுத்த விடமாட்டோம் என்று கூறுகிறார். இதன் மூலம் தேசத்தின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடுகிறார் என்றார்.
பேட்டியின் போது கரூர் மாவட்ட பாரதீய ஜனதா கட்சி தலைவர் கே.சிவசாமி உடனிருந்தார்.