மோடிக்கு மக்கள் ஆதரவு... தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு சரிவு - இல. கணேசன்
ஐந்து மாநில சட்டசபைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது மோடியின் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு மக்கள் ஆதரவு அளித்துள்ளதை காட்டுகிறது என்று பாஜக ராஜ்யசபா எம்.பி இல. கணேசன் கூறியுள்ளார்.
சென்னை: உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்த வெற்றி மோடியின் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு மக்கள் ஆதரவு அளித்துள்ளதை காட்டுகிறது என்று பாஜக ராஜ்யசபா எம்.பி இல. கணேசன் கூறியுள்ளார்.
உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியானது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உத்தரபிரதேசத்தில் மிகப்பிரம்மாண்ட வெற்றியை பெற்றுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்திலும் பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது.
இந்த வெற்றியை பாஜக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். பாஜக தலைவர்கள் உற்சாக கருத்தினை பதிவிட்டு வருகின்றனர். பாஜக ராஜ்யசபா எம்.பி இல. கணேசன் ஐந்து மாநில தேர்தல் பற்றி செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது அவர், மோடியின் கறுப்பு பண ஒழிப்பு, பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு கிடைத்த வெற்றி என்று கூறியுள்ளார்.
மோடிக்கு வெற்றி
பணமதிப்பு நீக்கத்திற்கு எதிராக மக்கள் இருப்பதாக எதிர்கட்சியினர் பொய்ப்பிரச்சாரம் செய்தனர். இது முறியடிக்கப்பட்டு விட்டது. மோடியின் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு நடைபெற்ற உள்ளாட்சித்தேர்தல், இடைத்தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறோம். இதேபோல சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறோம் என்று கூறினார்.
பாஜகவிற்கு நம்பிக்கை
மோடியின் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு மக்கள் வரவேற்பு அளித்துள்ளனர் என்று கூறிய அவர், தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு சரிவு ஏற்பட்டு வருவதாக தெரிவித்தார். தமிழகத்தில் பாஜகவிற்கு ஒரு நம்பிக்கை ஒளிக்கீற்று தெரிவதாகவும் கூறினார்.
உபி என்றாலே உற்சாகம்
உபி என்றாலே உற்சாகம் பிறக்கிறது என்பதுதான் பொருள். உத்தரபிரதேசத்தில் கிடைத்த வெற்றி இனி நாடு முழுவதும் எதிரொலிக்கும். தமிழகத்திலும் மக்கள் மனதில் பாஜகவை ஆதரித்தால் என்ன என்ற எண்ணம் பிறந்துள்ளது என்றும் கூறினார்.
நாங்கள் வளர்கிறோம்
தமிழகத்தில் நடைபெற உள்ளாட்சித்தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம். இதுநாள் வரை எங்களைப் புறக்கணித்தவர்கள் கூட இனி பாஜகவை ஆதரிக்க தயாராகி விட்டனர். தமிழகத்தில் உள்ள திராவிட கட்சிகள் பாஜகவைப் பற்றி குற்றம் சாட்டுகின்றனர். இது நாங்கள் வளர்ந்து கொண்டிருப்பதைக் காட்டுகிறது. எங்கள் மீது பொறாமை கொண்டுதான் இவ்வாறு பேசி வருகிறார்கள் என்றும் இல கணேசன் கூறினார்.