ஆதரிப்போம்... ஆனால் தோற்கடிப்போம்.. மாணவர்களின் பேச்சால் குழப்பமாகி கோபமான கணேசன்!
சென்னை: தன்னைப் பார்த்து ஆதரவு தெரிவிக்க வந்த மாணவர்கள், திடீரென எங்களது கோரிக்கையை நீங்கள் ஏற்காவிட்டால் உங்களைத் தோற்கடிப்போம் என்று முகத்துக்கு நேராகவே கூறியதால் தென் சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் இல.கணேசன் அதிர்ச்சியாகி விட்டார். பின்னர் சுதாரித்த அவர் பசங்க தெரியாம பேசுறாங்க என்று கூறியபடி செய்தியாளர்களிடம் விளக்கமாகப் பேசினார்.
தென் சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் இல.கணேசன் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார். தி.நகர் நடேசன் பூங்காவில் அவர் சாலையோர வியாபாரிகள், பொதுமக்கள் என பலரிடமும் வாக்கு சேகரித்தார்.
முன்னதாக அங்குள்ள கட்சி தேர்தல் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் இல.கணேசன். அப்போது, அங்கு, ஈழத்தமிழர்களுக்கான மாணவர் அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் இல.கணேசனுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறி, அவருக்கு வாழ்த்து சொல்ல வந்தனர். அதற்கு இல.கணேசன் இதனை பத்திரிகையாளர்களிடம் தெரிவிக்குமாறு கூறினார்.
இதையடுத்து பத்திரிக்கையாளர்களிடம் பேசினர் மாணவர்கள். அப்போது, ஈழத் தமிழர்களின் விடுதலைக்காக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாங்கள் போராடி வருகிறோம். எங்கள் கோரிக்கைகளை ஏற்று நடவடிக்கை எடுக்கும் கட்சிகளுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் ஆதரவு தெரிவிப்போம்.
தற்போது தென்சென்னை பாஜக வேட்பாளர் இல.கணேசனை சந்திக்க வந்துள்ளோம். இவர் எங்களின் கோரிக்கைகளை ஏற்காவிட்டால், தேர்தலில் இவருக்கு எதிராக செயல்பட்டு தோற்கடிப்போம் என்று கூறினார்.
அதுவரை நல்லாத்தேனே போய்ட்டிருந்தது என்று புன்னகை தவழ பார்த்துக் கொண்டிருந்த இல.கணேசன். இதைக் கேட்டு ஜெர்க் ஆகி ஏம்ப்பா இதைச் சொல்லவாப்பா இங்க வந்தீங்க என்று மாணவர்களை தடுத்து நிறுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இவர்கள் விவரம் தெரியாமல் பேசுகிறார்கள். இவர்களின் கோரிக்கைகளைத்தான் நாங்கள் எல்லா மேடைகளிலும் பேசி வருகிறோம். எங்களுடைய கோரிக்கையும் இதுதான் என்றார்.
இருந்தாலும் மாணவர்களை சமாதானப்படுத்தும் வகையில் அவர்களுக்கு கை கொடுத்தும், அரவணைத்தும் அனுப்பி வைத்தார்.