தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தினால் குண்டர் சட்டமா.. பாஜகவின் கைப்பாவை அதிமுக.. இளந்தமிழகம் கண்டனம்
மெரீனாவில் நினைவேந்தல் நிகழ்வை அனுசரிக்க முயன்ற திருமுருகன் காந்தி குண்டர் சட்டத்தில் கைது செய்திருப்பதற்கு இளந்தமிழகம் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னை: முள்ளிவாய்க்காலில் உயிரிழந்து ஈழத்தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தியதால் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, அவர் உள்பட மற்ற மூவர் மீது தமிழக அரசு குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்து அவரை வெளியே வர முடியாமல் அட்டூழியம் செய்துள்ளது. இதற்கு பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து இளம்தமிழகம் அமைப்பு வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது: மே 17 இயக்கம், தமிழர் விடியல் கட்சியின் தோழர்கள் மீது குண்டர் சட்டத்தை ஏவியுள்ள மத்திய, மாநில அரசுகளை இளந்தமிழகம் இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.
அப்பாவிகள் மீது இனவெறித் தாக்குதல்
2008 ல் ஆரம்பித்து 2009 மே மாதம் நடுப்பகுதியில் கொடுரமாக சிங்கள இனவெறியர்களால் முடித்து வைக்கப்பட்ட இன அழிப்பு போரில் ஒன்றரை இலட்சம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். அப்போது இங்கே இந்தியாவில் இருந்த மத்திய, மாநில அரசுகள் சிங்கள இனவெறி அரசுக்கு ஆதரவாக கடுமையான அடக்குமுறைகள் மூலம் தன்னெழுச்சியான போராட்டங்களை ஒடுக்கின, இலங்கை அரசை சர்வதேசத்திடம் இருந்தும் காப்பாற்றின.
இன்னமும் அடக்குமுறை
போர் முடிந்து 8 வருடங்கள் ஆன பின்பும், ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்ட பிறகும் இன்னமும் அடக்குமுறைகளும், கைதுகளும் தொடர்கின்றன். சுதந்திரமான பன்னாட்டு புலனாய்வு இன்னமும் ஆரம்பிக்கபடாமலேயே உள்ளன.
தமிழர் மரபு
போரில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது என்பது தமிழர் மரபு. ஆனால் 8 ஆண்டுகள் கடந்த பின்பும் ஈழப்போரில் கொல்லப்பட்ட மக்களுக்கு நினைவஞ்சலி செலுத்த கூட இந்திய ஆட்சியாளர்கள் அனுமதியை மறுக்கின்றனர், தடைவிதிக்கின்றனர். கடுமையான சட்டங்கள் மூலம் கைது செய்கின்றனர்.
குண்டர் சட்டம்
சென்னை மெரினாவில் மே 21 ந்தேதியன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடத்த, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் கூடிய பல்வேறு இயக்கத்தோழர்களை தாக்கி, கைது செய்திருந்தது காவல்துறை. தற்போது (29-05-2017) அவர்களில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர். திருமுருகன், தமிழர் விடியல் கட்சியின் தோழர்கள் டைசன், இளமாறன், அருண் ஆகியோர் மீது குண்டர் சட்டத்தில் தமிழக அரசு வழக்கு பதிந்துள்ளது. ஒரு ஆண்டுக்கு பிணை மறுக்கப்பட்டு, சிறையில் அடைக்கும் வழக்கு இது. ஈழத்தில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கு நீதி கிடைக்காமல் செய்யும் நோக்குடன் இந்திய, இலங்கை அரசுகள் இன்னமும் இணைந்து செயல்படுவதையே இந்த அடக்குமுறை கைதுகள் வெளிக்காட்டுகின்றன.
பாஜக மிரட்டல்
மேலும் பா.ச.க அரசு தொடந்து மக்களுக்கு எதிராக செயல்படுத்துவதற்கு தமிழ் நாட்டில் எழும் தன்னெழுச்சியான போராட்டங்களை தடுக்கவும், போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களை மிரட்டவுமே இது போன்ற கடுமையான அடக்கு முறை சட்டங்களை தோழர்கள் மீது இந்த அரசுகள் ஏவியுள்ளன.
கண்டனம்
தோழர்களை நீதியற்று கைது செய்துள்ள அதிமுகவின் எடப்பாடி அரசையும், அதிமுகவை கைப்பாவையாக வைத்து தமிழர்களின் போராட்டத்தை நசுக்கும் மத்திய பா.ச.க மோடி அரசையும் இளந்தமிழகம் இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. கைது செய்யப்பட்ட அனைவரையும் எந்த ஒரு நிபந்தனையுமின்றி உடனே விடுதலை செய்ய வேண்டும்.
அனைத்துலக நடவடிக்கை
போராடும் தமிழர்களை மிரட்டுவதை விட்டுவிட்டு, இலங்கை புரிந்த இனப்படுகொலைக்கு எதிரான சுதந்திரமான பன்னாட்டு புலனாய்வுக்கும், பொதுவாக்கெடுப்பு மூலம் ஈழத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்க இந்தியா அரசு அனைத்துலக மன்றங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளந்தமிழகம் இயக்கம் வலியுறுத்துகின்றது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.