ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் முன்பு கிருஷ்ணப்பிரியா ஆஜர்
ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் முன்பு கிருஷ்ணப்பிரியா ஆஜராகி உள்ளார்.
சென்னை : ஜெயலலிதா மரணம் குறித்து அமைக்கப்பட்டு உள்ள ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் முன்பு கிருஷ்ணப்பிரியா ஆஜராகி உள்ளார்.
ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, அவரது மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.
இந்த கமிஷன் முன்பு ஜெயலலிதா மரணம் தொடர்பாக பலரும் ஆஜராகி தங்களது விளக்கத்தை பதிவு செய்து உள்ளனர். சமீபத்தில் பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலா, அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி, ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், டி.டி.வி தினகரன், சசிகலா அண்ணன் மகள் கிருஷ்ணப்பிரியா, ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன் ஆகியோரை நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியது ஆறுமுகசாமி விசாரணை கமிஷன்.
இந்நிலையில், இன்று விசாரணை கமிஷன் முன்பு கிருஷ்ணப்பிரியா ஆஜராகி உள்ளார். அவரிடம் ஜெயலலிதா மரணம் குறித்தும், ஆர்.கே நகர் தேர்தலுக்கு முதல் நாள் வெளியான ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ குறித்தும் ஆறுமுகசாமி விசாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், தன்னிடம் உள்ள மற்ற ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோக்களையும் விசாரணை ஆணையம் முன்பு சமர்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனுக்கு போயஸ் கார்டன் வீட்டில் வேலை பார்த்தவர்களின் பட்டியல், தொலைபேசி எண்கள் ஆகியவற்றை சமர்பிக்குமாறு விசாரணை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.