விஜயகாந்தை விமர்சிப்பதா? அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா கடும் கண்டனம்
விஜயகாந்தை விமர்சிக்கும் அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தை விமர்சித்துள்ள அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் இருந்து வருகிறார் இளவரசி. அவரது மகள் கிருஷ்ணப்பிரியா தமது அறக்கட்டளை மூலம் செயல்பட்டு வருகிறார்.
நீட் தேர்வு எதிர்ப்பு, கன்னியாகுமரி மக்களுக்கு நிவாரண உதவியை அவரது கிருஷ்ணப்பிரியா அறக்கட்டளை செய்து வருகிறது. இதனிடையே அவ்வப்போது அரசியல் தொடர்பாகவும் தமது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார் கிருஷ்ணப்பிரியா.
இப்போது பகிரங்கமாக தமிழக அமைச்சர்களை விமர்சனம் செய்ய தொடங்கியுள்ளார் அவர். அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கண்டனம் தெரிவித்து கிருஷ்ணப்பிரியா பதிவிட்டுள்ளதாவது:
விஜயகாந்த் சிங்கப்பூர் செல்வது மருத்துவ சிகிச்சைக்காக என்பது , அனைவரும் அறிந்ததே. இதனை கிண்டல் செய்யும் , தெர்மகோல் புகழ் அமைச்சர், மனிதாபிமானம் மற்றும் அரசியல் நாகரிகம் இவற்றை இனியாவது கற்றுக்கொள்ள எத்தனித்தால் நல்லது.
அரசியல்வாதிகள், அரசியல்ரீதியான விமர்சனங்களை முன்வைக்கலாமே தவிர , ஒருவரது தனிப்பட்ட விஷயங்களில் விமர்சிப்பது என்பது, நாகரிகமில்லாத செயல்.
இவ்வாறு கிருஷ்ணப்பிரியா சாடியுள்ளார்.