வரதட்சணை கேட்டு டாக்டர் மனைவி கொலை.. இளவரசி உறவினருக்கு 2 நாள் கஸ்டடி
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனைப் பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் இளவரசியின் உறவினருக்கு, வரதட்சணை கேட்டு டாக்டர் மனைவி கொல்லப்பட்ட வழக்கில் 2 நாள் கஸ்டடி வழங்கப்பட்டுள்ளது.
திருவாரூர்: வரதட்சணை கேட்டு டாக்டர் மனைவி கொல்லப்பட்ட வழக்கில், இளவரசியின் உறவினரை 2 நாள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியின் முன்னாள் எம்எல்ஏ திமுகவைச் சேர்ந்த கு.பாலகிருஸ்ணன். அவரது பேரன் டாக்டர் இளஞ்சேகரன். இவர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள இளவரசியின் உறவினர். இவருக்கு சேரன்குளம் பகுதியைச் சேர்ந்த திவ்யா என்ற பெண்ணுடன் 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் கடந்த 17ம் தேதி இரவு உடலில் சந்தேகத்திற்குரிய காயங்களுடன் திவ்யா மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். திவ்யாவின் கணவர் வீட்டில், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திக் கொன்றுவிட்டதாக திவ்யாவின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, இந்தக் கொலை சம்பவம் குறித்து கோட்டாச்சியர் விசாரணை செய்தார். இந்நிலையில் திவ்யாவின் அண்ணன் போலீசில் புகார் ஒன்றையும் கொடுத்தார். இதன் பேரில் கணவர் இளஞ்சேரன், அவரது தந்தை முத்தழகன், தாய் ராணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்களிடம் விசாரணை நடத்த போலீஸ் கஸ்டடி எடுக்க வேண்டும் என்று மன்னார்குடி டி.எஸ்.பி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் வக்கீல் பொற்கொடி செல்வி ஆஜராகி கஸ்டடி வேண்டும் என்று கேட்டார். டாக்டர் இளஞ்சேரன் தரப்பிற்காக திவாகரனுக்காக ஆஜராகும் வழக்கறிஞர்கள் தமிழரசன் மற்றும் வீரையன் ஆஜராகி கஸ்டடி கொடுக்க கூடாது என்று வாதிட்டனர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் இன்று 27ம் தேதி மாலை 5 மணி முதல் 29ம் தேதி மாலை 5 மணி வரை போலீஸ் கஸ்டடி எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளது.