'Smule' ஆப்பில் இளையராஜாவின் பாடல்கள் இருக்க கூடாது.. காப்புரிமை ஆலோசகர் கோரிக்கை
ஸ்மூல் செல்போன் ஆப்பில் இருந்து இளையராஜாவின் பாடல்களை நீக்க வேண்டும் என்று அவரது காப்புரிமை ஆலோசகர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை: ஸ்மூல் செல்போன் ஆப் டேட்டாபேஸில் இருந்து இளையராஜாவின் பாடல்களை நீக்க வேண்டும் என்று காப்புரிமை ஆலோசகர் கோரியுள்ளார்.
ஸ்மூல் என்பது பொழுதுபோக்கு அம்சங்களான பாடல்களுடன் கூடிய செல்போன் செயலியாகும். இந்த செயலியை டவுன்லோடு செய்து கொண்டால் இதன் மூலம் பாடல்களை கேட்டு ஜோடியாகவும் பாட முடியும்.
இந்நிலையில் இளையராஜாவின் பாடல்களை ஸ்மூல் ஆப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று அவரது காப்புரிமை ஆலோசகர் பிரதீப் குமார் மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு அவர் தெரிவிக்கையில், எங்களிடம் அனுமதிக பெறாமல் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்துவது காப்புரிமை சட்டத்துக்கு எதிரானது.
எனவே அவற்றை அந்த நிறுவனத்தின் டேட்டாபேஸில் இருந்து நீக்க வேண்டும் என்று அந்நிறுவனத்துக்கு மெயில் அனுப்பியுள்ளோம். இசையமைப்பாளரின் பாடல்கள் வணிக ரீதியாக செயல்படும் போது அதை நிறுத்த அனைத்து உரிமைகளும் உண்டு.
அந்த நிறுவனம் சார்பில் செயலி கட்டணமாக ரூ.1100 வசூலிக்கப்படுகிறது. ஆனால் அந்த பணத்தில் இருந்து இசையமைப்பாளருக்கு எந்த பணமும் தருவதில்லை. இளையராஜாவின் பாடல்களை கேட்பதற்கு வணிக ரீதியாக மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரசிகர்கள் கேட்பதற்கு எந்த தடையும் இல்லை என்றார் அவர்.