விஜய்யும் "சிஸ்டத்தை" மாற்ற களம் குதிப்பாரா?.. பிறந்த நாளில் அரசியல் அறிவிப்பு??
நடிகர் விஜய் தனது அரசியல் பிரவேசம் குறித்து பிறந்தநாளின் போது அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பில் விஜய் மக்கள் மன்றத்தினர் குஷியாக சமூக சேவைப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை: இளையதளபதி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் விஜய் தனது அரசியல் நிலைப்பாட்டை ஜூன் 22ம் தேதி தனம பிறந்தநாளின் போது அறிவிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தள்ளது.
நடிகர் விஜய் சிறந்த நடிகராக வலம் வந்த காலகட்டத்தில் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திர சேகரன் மூலம் விஜய்க்கு அரசியல் ஆசை துளிர்விட்டது.
இதனைத் தொடர்ந்து சமூக நலன் சார்ந்த விஷயங்களில் அக்கறை காட்டும் வசனங்கள், பாடல்கள், கதாபாத்திரங்களில் ஆர்வம் காட்டத் தொடங்கினார். அவரது ரசிகர்கள் மத்தியிலும் அத்தகைய கதைக்கருவிற்கு வரவேற்பு கிடைக்கவே மக்கள் தலைவராக விஜய் சித்தரிக்கப்பட்டார்.
விஜய் ரசிகர் மன்றங்கள்
ரசிகர் மன்றங்களை மக்கள் மன்றங்களாக மாற்றி அதற்கான கொடியையும் விஜய அறிமுகம் செய்து வைத்தார். அதன் பிறகு தான் அவரது ரசிகர்கள் அரசியல் இலக்கை நோக்கி பயணிக்கத் தொடங்கினர்.
அரசியல் ஆசை
விஜய் அரசியலுக்கு வர திட்டமிட்டபோது முதலில் சேர நினைத்த கட்சி காங்கிரஸ். 2009 ஆகஸ்ட்டில் புதுவையின் அன்றைய முதல்வர் வைத்தியலிங்கம் முன்னிலையில் தனது மக்கள் இயக்கம் சார்பில் பிரம்மாண்டமான பொதுக்கூட்டத் தைக் கூட்டி நலத்திட்ட உதவிகளை செய்தார் விஜய்.
அரசியலுக்கு வருவேன்
அந்தக் கூட்டத்தில் பேசிய விஜய், ‘அரசியலுக்கு கட்டாயம் வருவேன். ஆனால், நிதானமாக வருவேன்'என்றார். சில தினங்களிலேயே டெல்லி சென்று ராகுல் காந்தியைச் சந்தித்தார். விஜய் தரப்பில் அப்போது ராஜ்யசபா உறுப்பினர் பதவியும் கேட்கப்பட்டதாக பேச்சுகள் அடிபட்டன.
காவலன் பட சர்ச்சை
தமிழகத்தில் விஜய் தரப்பினரும் திமுகவினரும் நெருக்கமாகவே இருந்தனர். ஆனால், காவலன் படம் சிக்கலுக்குப் பின்னணியில் திமுக இருந்ததாக கருதி, திமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார் விஜய். அதனால் 2011 சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தனர் விஜய் ரசிகர்கள்.
'தலைவா' ரிலீஸ் பிரச்னையால் அப்செட்
'தலைவா' படத்தில் 'டைம் டூ லீட்' என்ற வாசகம் இருந்ததோடு விஜய் மக்கள் தலைவர் போல சித்தரிக்கப்பட்டதால் படம் வெளியாவது தள்ளிப்போனது. இதனையடுத்து விஜய் அதிமுக அரசின் மீது கோபமடைந்தார். அதன்பின்னர் அவர் அரசியல் பேசுவதை அடக்கி வாசித்தார்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு
இதற்கிடையே, விஜய்யின் ரசிகர்களும் மக்கள் இயக்க நிர்வாகிகளும் அவரை அரசியல் ரீதியாக முடிவு எடுக்கச் சொல்லி உசுப்பேற்றிக்கொண்டே வந்தனர். நடிகர் விஜயும் அவ்வபோது சமூக நலன் சார்ந்த விஷயங்களில் கருத்து தெரிவித்தே வருகிறார். ஜல்லிக்கட்டு மீதான தடையை எதிர்த்து போராட்டம் நடந்த போது அதற்கு ஆதரவு தெரிவித்ததோடு, பீட்டாவை வெளியேற்ற வேண்டும் என்று முழங்கினார்.
மக்கள் பிரச்னைகளுக்கு ஆதரவுக் குரல்
இதே போன்று பாஜகவின் பண மதிப்பிழப்பு விவகாரம் குறித்தம் கருத்த தெரிவித்திருந்தார். சில தினங்களுக்கு முன்பு விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தது பரபரப்பாக பேசப்பட்டது. விருது விழாவில் பேசிய அவர், வல்லரசு, நல்லரசு என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.
எதிர்பார்க்கும் ரசிகர்கள்
தொடர்ந்து மக்கள் சார்ந்த பிரச்னைகளிலும் விஜய் அக்கறை செலுத்தி வந்த நிலையில் ஜூன் 22ம் தேதி தனது 43வது பிறந்தநாளில் அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை அவர் வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.
வெளியாகிறதா அறிவிப்பு?
இதன் ஒரு கட்டமாக மாவட்ட வாரியாக நிர்வாகிகளை சந்தித்து உட்கட்டமைப்பை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் குஷியான ரசிகர்கள் சுறுசுறுப்போடு விஜய் பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் நலப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
ரஜினி - விஜய்
ஏற்கனவே ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து பரபரப்பாகிக் கிடக்கும் தமிழக அரசியல், விரைவில் அடுத்த பரபரப்பை அடுத்த வாரத்தில் எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம். நடிகர் விஜயின் ரசிக கண்மணிகள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.