கள்ளக்காதல் தகராறு: கணவரை அடித்துக் கொன்று மாட்டுக் கொட்டகையில் புதைத்த மனைவி கைது
ஒரத்தநாடு: ஒரத்தநாடு அருகே தனது முறைகேடான காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை அடித்துக்கொன்று பிணத்தை மாட்டுக் கொட்டகையில் புதைத்த மனைவியைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கீழவன்னிப்பட்டு தேவபுரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஆறுமுகம் (வயது 65) என்பவரது மனைவி காந்திமதி (47). இவர்களுக்கு ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகிவிட்டது. மகன்கள் இருவரும் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றனர்.
ஆறுமுகம் மாற்றுத்திறனாளி என்பதால் காந்திமதிக்கும் வேறொரு நபருக்கும் இடையே தகாத உறவு இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால், தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 23-ந் தேதி மது அருந்தி விட்டு வந்த ஆறுமுகத்திற்கும், காந்திமதிக்கும் இடையே வழக்கம் போல சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த காந்திமதி உருட்டுக்கட்டையால் ஆறுமுகத்தைத் தாக்கியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஆறுமுகத்தைக் கொலை செய்த விவரம் வெளியில் தெரிந்தால் தான் போலீசில் சிக்கி விடுவோம் என அஞ்சிய காந்திமதி, ஆறுமுகத்தின் சடலத்தை அவர்களது வீட்டு மாட்டுத் தொழுவத்திலேயே புதைத்துள்ளார்.
ஆனால், சில தினங்களிலேயே மாட்டுக் கொட்டகையிலிருந்து துர்நாற்றம் கிளம்பவே, மீண்டும் ஆறுமுகத்தின் சடலத்தை தோண்டியெடுத்து சாக்கு மூட்டையில் கட்டி தெருவில் வீசியுள்ளார்.
துர்நாற்றத்துடம் சந்தேகத்துக்குரிய வகையில் சாக்குமூட்டை ஒன்று தெருவில் கிடப்பதாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரந்து வந்த போலீசார், அழுகிய நிலையில் ஆறுமுகத்தின் உடலை மீட்டனர்.
ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு ஆறுமுகத்தின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தஞ்சையிலிருந்து தடய அறிவியல் நிபுணர் வள்ளி தலைமையிலான குழுவினர் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
இதற்கிடையே சம்பவ இடத்துக்கு வந்த காந்திமதி கதறி அழுதபடி தனது கணவரை யாரோ அடித்துக்கொன்று பிணத்தை இங்கு வந்து வீசிச்சென்று விட்டதாக அழுது நாடகமாடியுள்ளார்.
ஆறுமுகம் கொலை தொடர்பாக ஊர் மக்கள் மற்றும் காந்திமதியிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்த காந்திமதி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதனால் காந்திமதியிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் கணவர் ஆறுமுகத்தைக் கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டார். தற்போது காந்திமதியைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
கணவனை மனைவியே அடித்துக்கொன்று பிணத்தை மாட்டுக்கொட்டகையில் புதைத்த சம்பவம் ஒரத்தநாடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.