கை, வாய், கண் கட்டப்பட்டு.. 4 உடல்களையும் கல்லால் கட்டி கிணற்றில் தள்ளிய கணவன்..பின்னணி காரணம் என்ன?
மனைவி, மகன்களை கொலை செய்ய காரணம் கணவனின் கள்ளக்காதல் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
காரிமங்கலம்: தருமபுரி அருகே மனைவி மற்றும் 3 குழந்தைகளையும் ஒரே கல்லில் கட்டி கிணற்றில் தள்ளி கொடூரமாக செய்த கொலைக்கு கணவனின் கள்ளக்காதலே காரணம் என தெரியவந்துள்ளது.
சப்பாணிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் லோகநாதன். இவருக்கு நதியா என்ற மனைவியும் 3 மகன்களும் உள்ளனர். இதில் மூத்த மகன் போலியோவினால் பாதிக்கப்பட்டு, கால்கள் செயல்பட முடியாத நிலையில் உள்ளான். டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியான லோகநாதன், குடிப்பழக்கத்திற்கு ஆளானவர்.
நீடித்த கள்ள உறவு
சரியாக வேலைக்கு போகாமல், அரசு தரும் பணத்தை கூட வாங்கி மது அருந்தி உள்ளார். இதை தவிர நதியாவின் பெற்றோரிடமும் அடிக்கடி மது அருந்த பணம் வாங்கி வருமாறும் வற்புறுத்தி வந்தார். இதனால் குடும்பத்தில் நாள்தோறும் பிரச்சனையும் தகராறும் வெடித்து வந்தது. இதனிடையே லோகநாதனுக்கு அதே பகுதியில் ஒரு பெண்ணுடன் கள்ளக்காதலும் இருந்து வந்தது. இதனை அறிந்த நதியா, கணவனை கண்டித்தார். எனினும் களவு உறவு தொடர்ந்து நீடித்தது.
நதியா எங்கே?
கடந்த இரு தினங்களுக்கு முன்பும் வீட்டில் கள்ளத்தகராறு காரணமாக பிரச்சனை வெடித்தது. அப்போது லோகநாதனும், அவரது பெற்றோரும் நதியாவை கடுமையாக அடித்துள்ளனர். அன்றைய தினம் நதியாவையும், மற்ற பிள்ளைகளையும் வீட்டில் இல்லாதது அக்கம்பக்கத்தினருக்கு தெரியவந்தது. நதியா எங்கே? என்று கேட்டதற்கு வெளியூர் சென்றிருப்பதாக லோகநாதன் அவர்களுக்கு பதிலளித்தார்.
மிதந்த பிணங்கள்
இந்நிலையில் நேற்று காலை அதே பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் குழந்தைகள் சடலம் மிதப்பதைகண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்தனர். விரைந்து வந்த அவர்கள், கிணற்றில் இறங்கி மீட்பு நடவடிக்கையில் இறங்கினர்.
கை, வாய், கண்களில் துணி
நதியா, மற்றும் 3 பிள்ளைகள் வாயிலும், கையிலும் கண்களிலும் துணியை கட்டப்பட்டும், அவர்களின் நால்வரின் உடல்களை ஒன்றாக கல்லால் கட்டப்பட்டும் இருந்தது. அவர்களை சடலமாக மீட்ட போலீசாரிடம், லோகநாதன், அவரது குடும்பத்தார் மீது தங்களுக்கு சந்தேகம் உள்ளதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர்.
கொடூரமாக கொலை செய்தோம்
இதனையடுத்து லோகநாதனிடம் கிடுக்கிப்பிடி விசாரணை துவங்கியது. அதில், லோகநாதன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததால், நதியா அடிக்கடி அதனை தட்டிக்கேட்டதாகவும், அதனால் நதியா உள்ளிட்ட 3 பிள்ளைகளையும் தானும் தன் பெற்றோரும் சேர்ந்து கை, கண், வாய்களில் துணிகளை கட்டிஇ உடலில் கற்களை கட்டி கிணற்றிலிருந்து தள்ளி விட்டு கொலை செய்தோம் என வாக்குமூலம் அளித்தார். இதனையடுத்து லோகநாதன், மற்றும் அவரது அம்மா, அப்பாவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.