விழுப்புரத்தில் கள்ள சாராய பாக்கெட்டுகள் விற்பனை- 2 பேர் கைது
விழுப்புரம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக சாராய பாக்கெட்டுகள் விற்பனை செய்வோர் கைது செய்யபட்டு உள்ளனர்.
Recommended Video
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் சாராய பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. இதுதொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
விழுப்புரம் அருகே செ.புதூர் கிராமத்தில் உள்ள ஏரி பகுதியில் உள்ள மலை குன்று அடிவாரத்தில், சாராய பாக்கெட்டு பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படும் வீடியோ வாட்ஸ் அப்-ல் வெளியானது.
இதன் மூலம் அந்த பகுதியில், சட்ட விரோதமாகச் சாராயம் விற்பனை செய்வது, வெளிச்சத்துக்கு வந்துள்ளதால், சாராயம் விற்பனை செய்பவர்களை கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அந்த வீடியோ காட்சியில் ஒரு இளைஞர் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படும் இடம், அதனால் அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்படுவது குறித்தும் விளக்கிக்கொண்டே செல்கிறார். முடிவில், அந்த சாராயம் விற்பனை செய்யும் இடத்துக்கு செல்லும், வீடியோ பதிவிடும் நபர், கள்ளச்சாராயம் விற்பனையாளர் பணத்தை எண்ணுவதுபோலவும், அவரின் அருகிலேயே சாராயம் குடித்து போட்ட பாக்கெட்டுகள் மற்றும் துணி போட்டு மறைத்து வைக்கப்பட்டிருக்கும், கள்ளச்சாராய மூட்டைகள் இருப்பதும் பதிவாகியுள்ளது.
இந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வீடியோவில் குறிப்பிட்ட பெரியதச்சூர் காவல்நிலைய எல்லையில் உள்ள செ.புதூர் கிராமத்தில் விசாரணை மேற்கொண்டு சாராய விபாரியை கைது செய்ய உத்தரவிட்டார்.
அந்த கிராமத்தில் விசாரணை மேற்கொண்ட காவல்துறை செ.குன்னத்தூர் கிராமத்தை சேர்ந்த செல்வம் என்ற சாராய வியாபாரி என்பது தெரிய வந்ததை அடுத்து அந்த பகுதியில் சாராய விற்பனையில் ஈடுபட்டு இருந்த அவனையும் அந்த பகுதியில் இருந்த ராஜ் ஆகிய 2 பேரையும் சுற்றி வளைத்துக் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஏராளமான சாராய பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இவர்கள் கைது செய்யப்பட்டதை அறிந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் காவல் நிலையம் சென்று நேரில் விசாரணை மேற்கொண்டார்.
விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து சாராயம் விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது