திருவண்ணாமலையில் அதிர்ச்சி.. வீட்டுக்குள் ரகசிய அறை அமைத்து கரு கலைப்பு.. பெண் கைது!- வீடியோ
திருவண்ணாமலை: ரகசியமாக ஸ்கேன் சென்டர் நடத்தி கருக்கலைப்பு நடத்தி வந்த பலே பெண்மணி, அதிகாரிகளின், அதிரடி சோதனையில் கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை, செங்குட்டுவன் தெருவில், அங்கீகாரமில்லாமல் ஸ்கேன் சென்டர் நடத்தப்பட்டுவரும் தகவல் சுகாதார துறை அதிகாரிகளுக்கு தெரியவந்தது.
இதையடுத்து சுகாதார பணிகள் பிரிவு இணை இயக்குநர் ராஜேந்திரன் தலைமையில், அதிகாரிகள் இன்று, அங்கு அதிரடி சோதனை நடத்தினர்.
பெயர் பலகை கூட இன்றி ஆனந்தி (என்ற) திலகா என்பவர் ஸ்கேன் சென்டர் நடத்தி வந்தது அப்போது தெரியவந்தது. அங்கு ஒரு அறையை திறக்க ஆனந்தி மறுத்தார். எனவே அதிகாரிகள் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர்.
அப்போது கருக் கலைப்பு உபகரணங்கள், ஸ்கேன் மிஷின் அங்கு இருந்தது தெரியவந்தது. பண முடிச்சுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து ராஜேந்திரன் கூறுகையில், எந்த வித கல்வி தகுதியும் இல்லாமல் ஸ்கேன் சென்டரை ஆனந்தி நடத்தியுள்ளார். இங்கு வரும் கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் செய்து பார்த்து கருவில் உள்ளது ஆணா, பெண்ணா என கண்டறிந்து, பெண் சிசு என்றால் கலைத்துவிடுகிறார்கள்.
ஸ்கேன் கருவி, எல்இடி டிவிகள், மருந்து, ஊசிகளை பறிமுதல் செய்துள்ளோம். இங்கு இருந்த 6 கர்ப்பிணிகளையும் மீட்டுள்ளோம் என்றார்.
கருக் கலைப்புக்கு ரூ.5 ஆயிரம் முதல் 50 ஆயிரம்வரை வசூலிக்கப்பட்டது அம்பலமாகியுள்ளது. கைது செய்யப்பட்ட ஆனந்தி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.