ஒரு காதல்.. கட்டாய திருமணம்.. கள்ளக்காதலால் கடைசியில் கொலை! திருச்சி அருகே நடந்த கொடுமை
திருச்சி: திருச்சி அருகே கள்ளக்காதலில் ஈடுபட்ட நபர், அந்த பெண்ணின் கணவர் மற்றும் சகோதரர்களால், வெட்டி கொலை செய்யப்பட்டார்.
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாண்டியன் (27). பெயிண்டர். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சத்யா என்ற பெண்ணுக்கும், மூன்று ஆண்டுகளுக்கு முன் காதல் ஏற்பட்டது.
இதையறிந்த சத்யாவின் பெற்றோர் காதல் ஜோடியை பிரிக்க திட்டமிட்டனர். சத்யாவை கட்டாயப்படுத்தி, சேலத்தை சேர்ந்த சபரிநாதன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர்.
சபரிநாதனுடன் இணைந்த வாழ்க்கையின் பயனாக, அத்தம்பதிக்கு, ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது.
ஆனால், திருமணம் ஆன பின்பும் சத்யா, பாண்டியனை மறக்க முடியாமல் கஷ்டப்பட்டார். பாண்டியனுடன் சத்யா தொடர்பு வைத்திருந்த விஷயம், சபரிநாதனுக்கு தெரியவந்தது.
இதையடுத்து, குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால், கணவனுடன் அவ்வப்போது சண்டை போட்ட சத்யா, தன் தந்தை வீட்டுக்கே திரும்பி வந்துவிட்டார்.
இது பழைய காதலன் பாண்டியனுக்கு வசதியாக போய்விட்டது. சத்யாவுடன் தனது பழக்கத்தை தொடர்ந்துள்ளார். இதுகுறித்து சபரிநாதனுக்கு தகவல் கிடைத்தது.
ஆத்திரம் அடைந்த சபரிநாதன், சத்யாவின் சகோதரர்களிடம் முறையிட்டுள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் பாண்டியன் வீட்டுக்கு சபரிநாதன், சத்யாவின் சகோதரர்கள் நான்கு பேருடன் சென்று பாண்டியனை அரிவாளால் வெட்டி, முகத்தை சிதைத்தனர். இதை தடுக்க வந்த பாண்டியன் அண்ணன் சுரேஷுக்கும் வெட்டு விழுந்தது. இருவரும் படுகாயம் அடைந்தனர்.
இதையடுத்து சபரிநாதன் மற்றும் சத்யாவின் சகோதரர்கள் தப்பியோடிவிட்டனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பாண்டியன் இறந்தார். சுரேஷ் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சமயபுரம் போலீசார், சத்யா, அவரது தாய், உட்பட ஐந்து பேரை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மற்றவர்களை தேடி வருகின்றனர்.
ஒரு காதல், திருமணம், கள்ளக்காதல் என மாறி கொலையில் முடிந்துள்ளது.