சென்னையில் இடி மின்னலுடன் இரவில் மழை... மேலும் மேலும் பெய்யுமாம்
சென்னை: தமிழகத்தின் தென் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் கன மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் சென்னை மற்றும் வட மாவட்டங்கள் சிலவற்றில் நேற்று இரவு நல்ல மழை பெய்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இலங்கை அருகே நிலை கொண்டிருக்கும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், தென் தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ள வானிலை மையம், சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனத் தெரிவித்துள்ளது
இந்தநிலையில் தமிழக கடல் பகுதியில், அதாவது வங்கக் கடலில் ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவாகும் வாய்ப்புள்ளதாகவும் தற்போது வானிலை மையம் அறிவித்துள்ளது.
இந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை படிப்படியாக ஓரிசாவை நோக்கி நகரலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னையில் நேற்று இரவு இடி மின்னலுடன் பல பகுதிகளில் மழை பெய்தது. அதேபோல திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பகுதிகளிலும் மழை பெய்துள்ளது.
இந்த மழை மேலும் நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.