விவசாயிகளை பாதிக்காத வகையில் கெயில் எரிவாயு திட்டத்தை செயல்படுத்துக: மோடிக்கு ஜெ., கடிதம்
சென்னை: கெயில் நிறுவன திட்டத்தால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக் கூடாது என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். கேரளாவில் உள்ளது போல தமிழகத்திலும் எரிவாயு குழாய்களை நெடுஞ்சாலை ஓரத்தில் அமைக்க வேண்டும் என்றும் அவர் எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் கோவை, ஈரோடு, திருப்பூர் உள்பட கொங்கு மண்டலத்தின் விளை நிலங்கள் வழியாக கெயில் நிறுவனத்தின் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்தை விவசாய நிலங்கள் வழியாகச் செயல்படுத்த தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
கெயில் எரிவாயு திட்டம் தொடர்பாக, சட்டசபையில் கடந்த 2013ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் பேசினர். இதற்குப் பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா, தேசிய நெடுஞ்சாலை வழியாக குழாய் பதிப்பு நடவடிக்கைகளை கெயில் நிறுவனம் மேற்கொள்ளலாம். திட்டத்துக்காக மக்கள் அல்ல, மக்களுக்காகவே திட்டம் என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. மக்களின் வாழ்வாதாரங்களை பாதிக்கும் எந்தத் திட்டத்துக்கும் அரசு என்றைக்கும் உடந்தையாக இருக்காது என்றார்.
இதனிடையே, கெயில் எரிவாயு திட்டத்தைச் செயல்படுத்த உச்ச நீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை அனுமதி அளித்தது. இது, கொங்கு மண்டலப் பகுதியில் உள்ள 7 மாவட்ட விவசாயிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகள் மீண்டும் போராட தயாராகி வரும் நிலையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.
மோடிக்கு ஜெயலலிதா கடிதம்
இந்நிலையில், பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். அதில், "கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கூட்டநாடு, மங்களூரு வழியாக பெங்களூருவுக்கு எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்தை இந்திய எரிவாயு ஆணையம் (கெயில்) செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
இந்தத் திட்டத்துக்காக தமிழகத்தின் சேலம், கோவை, கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், ஈரோடு, திருப்பூர் ஆகிய 7 மாவட்டங்கள் வழியாக எரிவாயு குழாய்கள் பதிக்கும் நடவடிக்கையில் கெயில் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. திட்டமிட்டபடி கெயில் நிறுவனம் எரிவாயு குழாய்களை பதித்தால் 7 மாவட்டங்களிலும் உள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவர். அவர்களது வாழ்வாதாரமான விளைநிலங்கள் கையைவிட்டுப் போகுமென்பதால் விவசாயிகள் பெரும் பதற்றத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க ஆந்திராவில் கெயில் பைப்லைன் விபத்தையும் நினைவுகூர விரும்புகிறேன். இதுபோன்ற விபத்துகளை தவிர்க்கவும், விளைநிலங்களை காப்பாற்றவும் தேசிய நெடுஞ்சாலைகள் ஓரத்தில் இத்திட்டத்தை செயல்படுத்தலாம் என்று ஆலோசனை கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் சுமுக பேச்சுவார்த்தை நடத்தி நல்ல தீர்வு காண வேண்டும். இவ்விவகாரத்தில் தாங்கள் தலையிட்டு பிரச்சினைக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் ஜெயலலிதா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.