அதிமுக அலுவலத்தில் எடப்பாடியார் அவசர ஆலோசனை ... போலீஸ் குவிப்பு - வீடியோ
அதிமுக தலைமை அலுவலத்தில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெறுவதால் என்றும் இல்லாத வகையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. அங்கு மோதல் ஏற்படும் என்ற அச்சம் எழுந்துள்ளதால் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.
ஓபிஎஸ் அணி எடப்பாடி பழனிச்சாமி அணி இடையேயான இணைப்பு பேச்சு வார்த்தைகள் நடைபெரும் என்று அறிவிக்கப்பட்டாலும் அதில் எந்த முன்னேற்றமும் இல்லை. இருதரப்பும் இணைவதற்கு முட்டுக்கட்டையாக இருப்பது சசிகலா மற்றும் தினகரன்தான் காரணம் என ஓபிஎஸ் தரப்பில் பலமுறை தெரிவிக்கப்பட்டு விட்டது.
பாஜகவும் ஒருங்கிணைந்த அதிமுகவுடன் தான் உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி என பகிரங்கமாகவே அறிவித்தது. இதனால் இரண்டு அணிகளும் இணைய வேண்டிய கட்டாய சூழ்நிலையை பாஜக உருவாக்கி வருகிறது என அரசியல் நோக்கர்கள் கூறிவருகின்றனர்.
இந்த சூழ்நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் சசிகலா, தினகரன் கட்சியிலிருந்து நீக்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.
அப்போது தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஏதாவது கலாட்டாவில் ஈடுபடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு என்றும் இல்லாத வகையில் குவிக்கப்பட்டுள்ளது.