வயல்காட்டு பொம்மை என கூறினால் செயல்காட்டும் வீரர்களாக எதிர்கட்சி மாறியிருக்க வேண்டும்: தமிழிசை
சென்னை: சட்டசபையில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி இரண்டுமே மக்கள் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விருகம்பாக்கத்தில் இன்று ஒலிம்பிக் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சட்டசபை கூச்சல் நிறைந்ததாக இல்லாமல், மக்களுக்காக நடக்க வேண்டும். ஆளும் அதிமுக அரசாசானது, எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு சரியான வாய்ப்பு வழங்க வேண்டும்.
அதே சமயத்தில், கொடுக்கப்படும் வாய்ப்புகளை எதிர்க்கட்சி உறுப்பினர்களும் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வயல்காட்டு பொம்மைகள் என ஆளும் கட்சி கூறியதும், செயல்காட்டும் வீரர்களாகத் தான் எதிர்கட்சி மாறியிருக்க வேண்டும்.
எதிர்கட்சி உறுப்பினர்களை வழிநடத்த வேண்டிய எதிர்க்கட்சித் தலைவர், வெளிநடப்பு செய்யும் தலைவராக இருக்கக் கூடாது. ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி ஆகியவை மக்கள் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.