ஆவடியில் சோகம்.. பீரங்கியில் இருந்து வெளியேறிய விஷவாயு தாக்கி ராணுவ வீரர் மரணம்!
ஆவடி ராணுவ பயிற்சி பள்ளியில் பயிற்சியாளர், பீரங்கியிலிருந்து வெளியேறிய விஷவாயு தாக்கி உயிரிழந்தார்.
திருவள்ளூர்: ஆவடி ராணுவ பயிற்சி மையத்தில் பீரங்கியிலிருந்து வெளியேறி விஷவாயு தாக்கியதில் ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில், ராணுவ பயிற்சி மையம் உள்ளது. இங்கு பீரங்கி பயிற்சியாளராக சேவையாற்றியவர் சக்திவேல். இவர் ராணுவத்தில் இருபது வருடங்களாகப் பணியாற்றினார். இந்நிலையில் இன்று வழக்கம் போல் ராணுவ வீரர்களுக்கு, பீரங்கியை இயக்குவது குறித்து வகுப்பெடுத்துக்கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக பீரங்கி சிலிண்டரில் இருந்த வாயு வெளியேறியுள்ளது. அதை உணர்ந்த அவர் வெளியேற முயன்றபோது பீரங்கியின் அவசர கால கதவு திறக்கவில்லை. இதையடுத்து மூச்சுத் திணறி சக்திவேல் உயிரிழந்தார்.
உயிரிழந்த ராணுவ வீரர் சக்திவேல் தேனி மாவட்டம், கடைமலைப்புதூரைச் சேர்ந்தசர். அவருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவியும் 7 வயதில் ஒரு பெண் குழந்தையும் 5 வயதில் ஆண்குழந்தையும் உள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.