டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு.. சென்னையில் சவம்போல் படுத்து போராடியவர்களுடன் தள்ளுமுள்ளு
டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை அம்பத்தூரில் சவம் போல் படுத்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
சென்னை: டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை அம்பத்தூரில் சவம் போல் படுத்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதற்கு காவல்துறை அனுமதி மறுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
வறட்சி நிவாரணம், விவசாயக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் மேற்கொண்டுள்ள போராட்டம் இன்று 30வது நாளை எட்டியுள்ளது. எலிக்கறி உண்பது, பாம்புக்கறி உண்பது, சவம் போல் படுப்பது, மண்சோறு சாப்பிடுவது என ஒவ்வொரு நாளும் விதவிதமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை அம்பத்தூரில் டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக 7வது நாளாக பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
அவர்கள் பாடைக்கட்டி சவம் போல் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஏராளமான பெண்களும் கலந்துகொண்டனர்.