சென்னையில் குறைந்து வரும் வேலைவாய்ப்பு...அதிர்ச்சியளிக்கும் ரிப்போர்ட்!
சென்னையில் வேலைவாய்ப்பு குறைந்து வருவதாக மான்ஸ்டெர் டாட் காம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சென்னை: சென்னையில் வேலைவாய்ப்பு சரிவடைந்துள்ளதாக மான்ஸ்டெர் டாட் காம் வெளியிட்ட அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா முழுவதும் படித்தவர்களும் படிக்காதவர்களும் வேலை தேடி வரும் பெரும் நகரமாக சென்னை உருவாகியுள்ளது. குறிப்பாக மென்பொருள் மற்றும் ஆட்டோமொபைல் தொழிலில் சென்னை பல லட்சக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பை அள்ளித் தருகிறது.
ஆனால், சமீபகாலமாக சென்னையில் வேலைவாய்ப்பு மிகவும் சரிவடைந்து விட்டதாக மான்ஸ்டர்.காம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதுவும் ஆன்லைன் மூலமாக பணியாளர்களைச் சேர்ப்பது சென்னையில் மட்டும் 12% குறைந்துள்ளது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் தகவலாக உள்ளது.
ஆனால், நாடு முழுவதும் கடந்த நவம்பர் 8ஆம் தேதி பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு அறிவிப்பை வெளியிட்ட பிறகு பல்வேறு தொழில்கள் நசிந்துள்ளன. அதனால் பலர் வேலை இழந்துள்ளனர் என்பதும் வேலைவாய்ப்பு குறைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.