நடத்தையில் சந்தேகம்.. மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற கணவர்.. சென்னையில் பயங்கரம்
சென்னை காசிமேட்டில் மனைவின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக கணவரே கத்தியால் குத்திக் கொன்ற நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: காசிமேட்டில் மனைவின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக கணவரே கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் கணவரை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை காசிமேடு இந்திரா நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் மதி. 50 வயதான இவர் மீன்பிடித் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி தேசம்மாள்.
இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார்.
மனைவியின் நடத்தையில் சந்தேகம்
இந்நிலையில் மனைவி தேசம்மாளின் நடத்தையில் மதிக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்றிரவும் கணவன் மனைவிக்குள் வழக்கம் போல் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த சண்டை இன்று காலையில் எழுந்தப் பிறகும் தொடந்துள்ளது.
சரமாரியாக கத்திக்குத்து
இதனால் ஆத்திரம் அடைந்த மதி, சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்துவந்து தேசம்மாளின் வயிற்றில் சரமாரியாக குத்தியுள்ளார். ரத்தவெள்ளத்தில் விழுந்த தேசம்மாள் கத்தி கூச்சலிட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு மகன் அஜீத் ஓடிவந்து தாயை காப்பற்ற முயன்றுள்ளார். ஆனால் அவரையும் மதி கத்தியால் குத்தினார்.
மகன் படுகாயம்
இதில் அஜீத்தும் படுகாயம் அடைந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர். இதையடுத்து மதி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுபற்றி தகவல் அறிந்ததும் காசிமேடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மனைவி பலி - மகனுக்கு சிகிச்சை
சிகிச்சை பலன் அளிக்காமல் தேசம்மாள் பரிதாபமாக இறந்தார். அஜீத்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்த புகாரின் அடிப்படையில் காசிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மதியை கைது செய்தனர்.