அனிதா சாவுக்கு நியாயம் கேட்டு சென்னையில் பல்வேறு இடங்களில் போராட்டம்.. மோடி உருவ பொம்மை எரிப்பு
சென்னை: சென்னையில் 10க்கும் மேற்பட்ட பகுதிகளில் இன்று அனிதாவுக்கு நியாயம் கேட்டும், நீட்டுக்கு எதிராகவும் போராட்டங்கள் நடந்தன. பிரதமர் மோடியின் கொடும்பாவி எரிக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய மாணவர் பெருமன்றத்தை சேர்ந்த 40க்கும் மேற்பட்டோர் திருவல்லிக்கேணியில் பிரதமர் மோடி கொடும்பாவியை எரித்து போராட்டம் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உச்சநீதிமன்றத்தில் திடீரென மத்திய அரசு பல்டியடித்து, நீட் தேர்வு அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று கூறிய நிலையில் அந்த கோபத்தில் மாணவர் பெருமன்றத்தினர் இவ்வாறு போராட்டம் நடத்தினர்.
போர்க்களம்
இதையடுத்து, விரைந்து சென்ற போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தி அப்புறப்படுத்தியுள்ளனர். இதனால் இரு தரப்புக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அந்தப் பகுதியே போர்க்களம் போல காணப்பட்டது.
பல போராட்டங்கள்
சென்னையில் 10க்கும் மேற்பட்ட போராட்டங்கள் நடந்துள்ளன. தொடர்ந்து போராட்டம் நடந்தது. அங்கெல்லாம் போலீசார் விரைந்து சென்று அவர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர்.
அண்ணாசாலை
அண்ணா சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக மார்க்சிஸ்ட் கட்சியினர் நடத்திய போராட்டத்தால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து அழைத்து சென்றனர்.
மெரினாவில் பதற்றம்
சென்னை முழுவதும் போராட்டம் பரவி வருவதால் போலீஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர். மெரீனா கடற்கரையிலும் அசாதரண சூழல் நிலவுகிறது. அங்கு மக்கள் கூடுவதற்கு போலீசார் தடை விதித்தனர்.