சென்னை அருகே அபார்ட்மென்ட்டில் பெண் என்ஜினீயர் படுகொலை…..சிக்கிய கடிதம்!
சென்னை: சென்னை வேளச்சேரி அருகே பெரும்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கைக் குழந்தையுடன் இருந்த பெண் என்ஜினீயர் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார்.
அவர் எழுதியதாகக் கூறப்படும் கடிதத்தால் போலீசார் குழம்பித் தவிக்கின்றனர்.
கம்ப்யூட்டர் என்ஜினியர் தம்பதி
பெரும்பாக்கம் அந்தோணியார் நகர் 2-வது தெருவில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ராஜீவ். கம்ப்யூட்டர் என்ஜீனியரான இவர் சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஆர்த்தியும் சாப்ட்வேர் என்ஜினீயர். இவர்களுக்கு 10 மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது.
குழந்தைக்காக வேலையை உதறிய ஆர்த்தி
உறவினரான ஆர்த்தியும், ராஜீவும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு முன்னர் தனியார் நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக பணிபுரிந்து வந்த ஆர்த்தி சில மாதங்களாக குழந்தையை கவனிப்பதற்காக வேலையில் இருந்து நின்று விட்டார்.
கழுத்து இறுக்கப்பட்டு கொலை
ராஜீவ் வழக்கம் போல வேலைக்கு சென்ற நிலையில், ஆர்த்தியும், குழந்தையும் மட்டுமே வீட்டில் இருந்தனர். இரவு 11 மணி அளவில் ராஜீவ் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிய போது, வீட்டினுள், ஆர்த்தி கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவரது வாயில் நுரை தள்ளி இருந்தது.
நகைக்காக கொலையா?
இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார், கொலையுண்ட ஆர்த்தி அணிந்திருந்த தாலி செயின் மாயமாகி இருந்ததை கண்டறிந்தனர். எனவே நகைக்காக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் கருதினர். இது தொடர்பான தடயங்களை சேகரிப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.
உள்ளாடையில் பாலிதீன் கவர்
ஆர்த்தியின் உடலில் வேறு எங்காவது காயங்கள் இருக்கிறதா? என்று ஆய்வு செய்யப்பட்டது. அப்போது ஆர்த்தியின் மேல் உள்ளாடைக்குள் ஒரு சிறிய பாலித்தீன் கவர் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அதனை எடுத்து போலீசார் பிரித்து பார்த்தனர்.
அன்புக்காக ஏங்குகிறேன்...
அந்த கவரில் தாலியும், 2 பக்கங்களில் எழுதப்பட்ட கடிதமும் இருந்தது. ‘‘ஓம் நமசிவாய....தாலி எனக்கு வேண்டும்.... அன்புக்காக ஏங்குகிறேன். என்னை யாரும் சரியாக புரிந்து கொள்ளவில்லை. நான் நன்றாக வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டேன்'' என்பது போன்ற வார்த்தைகள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது.
கணவன் மனைவி இடையே பிரச்சினை
தனக்கு திருமணமானதில் தொடங்கி தொடர்ந்து கணவன்-மனைவிக்குள் நிலவி வந்த பிரச்சினைகள் பற்றியும் அதில் விரிவாக குறிப்பிடப்பட்டிருந்தது.
நகைக்காக கொலை இல்லை
கொள்ளையடிக்கப்பட்டதாக கருதப்பட்ட செயினில் மாட்டப்பட்டிருந்த தாலி டாலர் கிடைத்ததால் நகைக்காக ஆர்த்தி கொலை செய்யப்படவில்லை என்று கருதி போலீசார் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
சிக்காத தாலி செயின்
இதையடுத்து தாலிச் செயின் வீட்டில் எங்காவது வீசப்பட்டிருக்கலாம் என நினைத்து போலீசார் தேடிப் பார்த்தனர். ஆனால் செயின் கிடைக்கவில்லை. அதனை கொலையாளி திருடிச் சென்றிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
கடிதம் ஏற்படுத்திய குழப்பம்
அதே நேரத்தில் அவரது ஆடைக்குள் தாலியும் கடிதமும் மறைத்து வைக்கப்பட்டிருப்பது இந்த வழக்கில் புதிய குழப்பத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
கொலை வழக்குப் பதிவு
ஆர்த்தியின் கழுத்து இறுக்கப்பட்டு வாயிலும் நுரை தள்ளி காணப்பட்டதால் கொலையாளி, அவரை கழுத்தை நெரித்ததுடன், வாயிலும் விஷத்தை ஊற்றியிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இக்கொலை சம்பவம் தொடர்பாக பள்ளிக்கரணை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தவிக்கும் 10 மாத குழந்தை
இதற்கிடையே தாயை இழந்து தவித்து வரும் 10 மாத பெண் குழந்தை மிகவும் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. இக்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.