துப்பாக்கி முனையில் 3 கிலோ தங்கம், 4 கிலோ வெள்ளி கொள்ளை... ஹெல்மெட் அணிந்து வந்த கும்பல் துணிகரம்
கோவை : 3 கிலோ தங்கம், 4 கிலோ வெள்ளியை ஹெல்மெட் அணிந்து வந்தவர்கள் துப்பாக்கி முனையில் நேற்று கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் பிரபல நகைக் கடையின் 2 கிளைகள் கோவை, ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் சாலையில் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கடைக்குச் சொந்தமான கிடங்கு கோவை, பீளமேடு, பாரதி காலனியில் உள்ளது. அங்கிருந்து அவ்வப்போது தேவைக்கேற்ப தங்கம், வெள்ளி கடைகளுக்கு எடுத்துச் செல்வது வழக்கம்.
இந்நிலையில், நேற்று மாலை வாடகை வேன் ஒன்றில் நகைக் கடை நிர்வாகி வெங்கடபதி, பெண் பணியாளர் கிருஷ்ணபிரியா ஆகியோர் பீளமேட்டில் உள்ள கிடங்கிலிருந்து நகைகள் செய்ய கொடுப்பதற்காக ரூ. 75 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ 83 கிராம் தங்கம், 4 கிலோ 810 கிராம் வெள்ளியை எடுத்துக் கொண்டு வேனில் வெரைட்டிஹால் நோக்கி சென்றுள்ளனர். பொள்ளாச்சியைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் வேனை ஓட்டினார்.
வேன், பாரதி காலனி கிடங்கிலிருந்து அவிநாசி சாலை நோக்கி சென்றது. அங்கிருந்து சிறிது தொலைவில் உள்ள தனியார் உணவகம் அருகே சென்றபோது 2 இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்து வந்த நான்கு பேர் கும்பல் வேனை மறித்து முதலில் சுரேஷ்குமாரைத் தாக்கியது.
இதில், சுரேஷ்குமாருக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களைக் காட்டி மிரட்டி வேனில் இருந்த நகைகளை இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பீளமேடு குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
மாநகரக் காவல் துணை ஆணையர் ரம்யாபாரதியும் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். பீளமேடு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தங்கம் பீளமேட்டிலிருந்து எடுத்துச் செல்லப்படுவதை வழித்தடம் முதற்கொண்டு அறிந்த கும்பல் ஒன்றே திட்டமிட்டு இக்கொள்ளையில் ஈடுபட்டிருக்க வேண்டும் என காவல் துறையினர் சந்தேகித்தனர்.
இதையடுத்து, வேன் ஓட்டுநர் உள்பட தங்கம் எடுத்துச் சென்ற அனைவரும் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். மேலும், அந்த நிறுவனத்தில் தங்கம் பீளமேட்டிலிருந்து கொண்டுவரப்படுகிறது என்ற தகவலறிந்த தற்போதைய பணியாளர்கள், நிர்வாகிகளிடமும், ஏற்கெனவே அந்நிறுவனத்தில் வேலை செய்தவர்கள் பற்றியும் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில், சமீபத்தில் அங்கு பணியிலிருந்து விலகிய இருவர் மீது காவல் துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அவர்கள் இருவர் உள்பட 4 பேரைச் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்து வருவதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
தவிர, அப்பகுதியில் சேகரிக்கப்பட்ட கண்காணிப்புக் கேமரா பதிவுகளை வைத்தும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.