கர்நாடகாவுக்கு தண்ணீர் செல்வதை தடுத்து சத்தியமங்கலத்தில் தடுப்பணை.. விவசாயிகள் கோரிக்கை- வீடியோ
சத்தியமங்கலத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெய்துவருவதால் நீர் பெருக்கெடுத்து ஓடி கர்நாடகாவுக்குச் செல்கிறது.
ஈரோடு: ஈரோடு சத்தியமங்கலத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்து நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.தாளவாடி பகுதியில் தடுப்பணைகள் இல்லாத காரணத்தால் நீர் கர்நாடகாவுக்குச் செல்கிறது. எனவே, தாளவடிப் பகுதிகளில் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 140 வருடங்களில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு கடும் வறட்சியும் வெப்பமும் நிலவி வந்தது. கடந்த ஆண்டு பருவமழை பொய்த்த காரணத்தால் விவசாயம் முற்றிலும் அழிந்து, பல நூறு விவசாயிகள் மாண்டு போயினர்.
தமிழகத்தை வாட்டி வரும் கடும் கோடைக்கு நடுவே ஆங்காங்கே மழை பெய்துவருகிறது. ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக கனமழை பெய்து வருவதால் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆனால் தாளவாடி உள்ளிட்ட ஊர்களில் தடுப்பணைகள் இல்லாத காரணத்தால் மழை நீர் அனைத்தும் கர்நாடகவை நோக்கிச் செல்கிறது என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தாளவாடி உள்ளிட்ட ஊர்களில் தடுப்பணைகளைக் கட்டினால், மழைநீர் தேக்கிவைத்து நிலத்தடி நீரை உயர்த்த முடியும். விவசாயமும் செழிக்கும். ஆகவே அரசு தடுப்பணைகள் கட்டித் தர வேண்டும் என விவசாயிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.