குடி போதையில் வாகனம் ஓட்டுபவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு - அபராத தொகை கிடுகிடு உயர்வு!
கன்னியாகுமரி மாவட்டத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் அபராதத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது.
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் அபராதத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை குடிபோதையில் வாகனம் ஓட்டி 5800 பேர் சிக்கி உள்ளனர். அதிக விபத்து, உயிர் பலிகளுக்கு போதையில் வாகனம் ஓட்டி வந்ததே காரணமாக அமைந்து உள்ளது.
குமரி மாவட்டத்தில் அதிகளவில் விபத்துக்கள் நடந்து வருகின்றன. கடந்த 8 மாதங்களில் 208 பேர் பலியாகி உள்ளனர். இவர்களில் இளைஞர்களே அதிகம் உயிரிழந்துள்ளனர்.
குடிபோதையில் வாகனம் ஓட்டுவதும் விபத்துக்களுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன. இரவு நேர வாகன சோதனையில் குடிபோதையில் அதிகம் பேர் சிக்குகிறார்கள்.
சமீப காலமாக இவர்களின் லைசென்ஸ் ரத்து செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்குட்பட்ட 8 காவல் நிலையங்களில் இதுவரை 450 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
போலீஸ் ஒருபுறம் நடவடிக்கை எடுத்தாலும் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை குறைய வில்லை. ஒவ்வொரு நாளும் இந்த எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது.
இதில் குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் கூட அதிகம் பேர் சிக்கி உள்ளனர். இந்த ஆண்டு இதுவரை 5,800 பேர் குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்து சிக்கி உள்ளனர். இதில் 35 ல் இருந்து 40 சதவீதம் பேர் போதையில் பைக் ஓட்டி வந்தவர்கள் ஆவர்.
கார்களில் குடிபோதையில் வந்த பெண்கள் கூட பிடிபட்டுள்ளனர். இந்த ஆண்டு இதுவரை குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்தவர்களிடம் இருந்து சுமார் ரூ.57 லட்சம் வரை அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மத்தியில் இது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை காவல்துறை மேற்கொள்ள வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.