'உங்க மேல பிராத்தல் கேஸ் போடுவோம்'.. கதிராமங்கலம் பெண்களை மிரட்டிய போலீஸ்!
கதிராமங்கலத்தில் போலீசார் திட்டமிட்டு கலவரத்தைத் தூண்டி பெண்கள் மீது பிராத்தல் கேஸ் போடுவோம் என கூறி அச்சுறுத்தியுள்ளனர்.
கும்பகோணம்: போலீசாரே தீப்பற்ற வைத்தனர். மக்கள் மீது திட்டமிட்டு வன்முறையை பிரயோகித்தனர். போலீசார் எங்கள் மீது பிராத்தல் கேஸ் போடுவோம் என மிரட்டினர் என கதிராமங்கலத்தில் போலீசார் அராஜகம் குறித்து அந்த ஊரைச் சேர்ந்த பெண்கள் கதறியழுது ஒரு வீடியோவில் கூறியுள்ளது காண்பவரை கலங்கடிக்கிறது.
கும்பகோணம் அருகேயுள்ள கதிராமங்கலத்தில் ஒ.என்.ஜி.சி குழாய் பதித்து எண்ணெய் எடுக்கும் திட்டத்தை எதிர்த்து மக்கள் போராடி வருகின்றனர். ஆனால், போலீசார் அதனை திட்டமிட்டு கலவரமாக மாற்றினர் என அந்த ஊரைச் சேர்ந்த பெண்கள் கூறுகின்றனர். அப்பெண்கள் கூறியதிலிருந்து.....
''கதிராமங்கலத்தில் பதிக்கபட்டுள்ள குழாயில் இருந்து ஏதோ திரவம் வெளியாகியது. அது முகவும் துர்நாற்றம் மிகுந்ததாக இருந்தது. அதனை ஊர்மக்கள் அனைவரும் அங்கு சென்று பார்த்தோம். மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று கூறித்தான் இந்த திட்டத்தைக் கொண்டு வந்தார்கள். ஆனால், இப்படி நீர் கொப்பளித்துக்கொண்டு வெளியே வருகிறதே எனக் கேட்டோம். மேலும் கலக்டர் நேரில் வந்து பார்த்து எங்களுக்கு உத்தர்வாதம் தர வேண்டும் என கூறினோம்.
போலீஸ்தான் தீப்பற்ற வைத்தனர்
ஆனால் போலீஸ்காரர்கள் எங்களில் இரண்டு பேரை மட்டும் உள்ளே விடுங்கள் எனக் கூறினார்கள். அவர்கள் உள்ளே சென்ற நிமிடத்தில் அங்கு தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. பிறகு பார்த்தால் அங்கு ஃபயர் சர்வீஸ் வண்டி நிற்கிறது. போலீசார் வேண்டுமென்றே கலவரத்தைத் தூண்டினார்கள். ஊரில் உள்ள வேலிகளில் இருந்து நுணா குச்சி உள்பட பல கம்புகளை வெட்டிவைத்திருந்தனர். அதன் மூலம் மக்களை அடித்து விரட்டினர்.
பிராத்தல் கேஸ் மிரட்டல்
போலீசாரின் அடியைத் தாங்க முடியாமல் பெண்களும் வயதானவர்களும் இங்கும் அங்கும் ஓடினர். போலீசார் பெண்களைப் பார்த்து உன் மேல பிராத்தல் கேஸ் போடுவோம் என மிரட்டியதால் பல பெண்கள் பயந்து ஓடினர். போலீசாரின் அடிக்குப் பயந்து ஓடியதில் கால்வாய், வேலி என எல்லா இடங்களில் விழுந்து ஓடினோம்'' என்றார் ஒரு பெண்மணி.
தீயால் யாருக்கு ஆபத்து?
மற்றொருவர் கூறும்போது,''போலீசார் தான் வேண்டுமென்றே கொளுத்தினர். ஆறு மணிக்கு மேல் மக்கள் போராட்டம் வலுத்துவிடுமோ என்ற அச்சத்தில் தீயைப் பற்ற வைத்தனர். போலீசார் நாங்கள் தான் பற்றவைத்தோம் என்று கூறுவது அப்பட்டமான பொய். அதைப் பற்ற வைப்பதால் எங்களுக்குத்தானே ஆபத்து.
கலெக்டரை வரச் சொல்லுங்கள்
முன்பு நடந்த கூட்டத்தில் சப் கலெக்டர், இந்த திட்டத்தால் எந்த பாதிப்பும் வராது எனக் கூறினார். ஆனால் இப்போது வந்து தீப்பற்றி விடும். இடத்தை காலி பண்ணுங்கள் என கூறினார். அவரிடம் நாங்கள் இதைத்தானே நாங்கள் முன்பே சொன்னோம். இப்போது இப்படி ஆகிறதே. இதற்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டாம். கலெக்டர் தான் பதில் சொல்ல வேண்டும் என கூறினோம்.
போலீசுக்கும் குழந்தைகள் இருக்கிறதுதானே?
மதியம் இரண்டு மணிக்கு மேல் போலீசார் திரண்டு வந்து, எங்கள் ஊரில் மரக்கிளைகளை ஒடித்து கம்பு செய்து எங்களை அடித்தனர். ஓட ஓட விரட்டினர். பெண்களை நெஞ்சைப் பிடித்து தள்ளிவிட்டனர். அதைவிட இளைஞர்களை காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கினார்கள். அவர்களுக்கும் குழந்தைகள் இருப்பார்கள் தானே?
கலவரம் வரும்னு நினைக்கலையே
ஏன் இந்த பசங்களை அடிக்கிறீர்கள் எனக் கேட்டதற்கு ஒரு போலீச்காரர் என்னைப் பிடித்து தள்லியதில் நான் கீழே விழுந்தேன். அதன்பிறகு என்னால் எழுந்திருக்கவே முடியவில்லை. நாங்கள் இப்படி ஒரு கலவரம் என்று எதிர்பார்க்கவே இல்லை. கலெக்டர் வருவார். பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்று நம்பினோம். ஆனால் போலீசார்தான் வேண்டும் என்றே கலவரத்தை உண்டு பண்ணினார்கள்.
கலெக்டர பாக்கணும்னு சொன்னது குற்றமா?
கலெக்டர் வந்து பார்க்க வேண்டும் என்று கோரிக்கை தானே வைத்தோம். ஆனால் அவர்களே தீவைத்து, எங்களை அடித்து நொறுக்கினார்கள். ஒருவேலை வீட்டில் தீப்பற்றிவிட்டால் என்ன செய்வது என்று நாங்கள் பயந்து செத்தோம். எங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். எங்கள் கிராமத்துக்கு நேர்ந்த கதி இன்னொரு கிராமத்துக்கு நேரக் கூடாது'' என கண்ணீருடன் அப்பெண்கள் கூறியது கலங்கடித்தது.