கொடநாடு பங்களா எஸ்டேட் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் திடீர் தற்கொலைக்கு காரணம் என்ன?: வீடியோ
ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் பங்களாவின் கம்ப்யூட்டர் ஆபரேட்டராகப் பணிபுரிந்த தினேஷ் தற்கொலை செய்துகொண்டார். தினேஷ் தற்கொலைக்கான காரணத்தை கண்டுபிடிக்க வேண்டும் என கொடநாடு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர
கோத்தகிரி: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் எஸ்டேட் பங்களாவில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்த தினேஷ் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மறைந்த முதல்வருக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி கருப்பு நிறக் காரில் வந்த ஒரு கும்பல், அங்கிருந்த காவலாளி ஓம்பகதூர் என்பவரை கொலை செய்தது. மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதூர் பலத்த காயமடைந்தார்.
இந்நிலையில் இந்த கொலையில் தொடர்புடைய ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் என்பவர் சாலை விபத்தில் மரணம் அடைந்தார். ஆனால் அது கொலை என அவரது அண்ணன் பகிரங்கமாக ஊடகங்களிடம் சொன்னபோதும் அதுகுறித்து காவல்துறை கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில், கொடநாடு எஸ்டேட்டில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணிபுரிந்த தினேஷ் தூக்கிட்டு தற்கொலைச் செய்துகொண்டுள்ளார். அவருக்கு கண்ணில் பிரச்சனை, அதற்காக மருத்துவம் பார்த்துக்கொண்டிருந்தார். அதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து, கோத்தகிரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆனால் ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு தொடர்ந்து அங்கு கொலை, கொள்ளை, தற்கொலை நடக்கிறதென்றால் அங்கு ஏதோ மர்மம் இருக்க வேண்டும். அந்த மர்மத்தை போலீசார் தான் கண்டுபிடிக்க வேண்டும் என கொடநாடு மக்கள் கூறுகின்றனர்.