நாகையில் மற்றொரு அதிர்ச்சி.. தீயணைப்புத்துறை கட்டடம் தரைமட்டமானது
நாகை: தீயணைப்பு நிலையத்தில் அதிகாரிகள் தங்கும் கட்டடம் இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசுக்கட்டடங்கள் இடிந்து விழுந்து வருவது தொடர் கதையாகி வருகிறது. நேற்று நாகை அருகே பொறையாறில் அரசு போக்குவரத்து பணிமனையின் ஓய்வறை இடிந்து விழுந்தது.
இதில் பணிமுடித்து தூங்கிக்கொண்டிருந்த போக்குவரத்து ஊழியர்கள் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அரசின் அலட்சியமே விபத்துக்கு காரணம் எனக் கூறி பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.
இதேபோல் கடந்த மாதம் கோவை மாவட்டம் சோமனூரில் பேருந்து நிலையம் இடிந்து விழுந்த விபத்தில் பொதுமக்கள் 5 பேர் பலியாயினர். நீண்ட ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய அரசுக் கட்டடங்கள் முடிறையாக பராமரிக்கப்படாமல் இருந்ததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
இந்நிலையில் நாகையில் தீயணைப்பு நிலைய அதிகாரிகள் தங்கும் கட்டடத்தின் ஒரு பகுதி சுவர் இன்று இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இந்தக் கட்டடம் 1943ஆம் ஆண்டு கட்டப்பட்டது என தெரிய வந்துள்ளது. நேற்று போக்குவரத்து பணிமனை இடிந்து விழுந்து 9 பேர் பலியான அதிர்ச்சி அகல்வதற்குள் தீயணைப்பு கட்டடம் இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.