தந்தையார் வையாபுரி நினைவு நாள்... புழல் சிறையில் மௌனவிரதம் இருக்கும் வைகோ!
புழல் சிறையில் இருக்கும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இன்று மௌன விரதத்திலொ ஈடுபட்டு உள்ளார். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த விரதத்தை தன் தந்தை வையாபுரியின் நினைவு தினத்தையொட்டி கடைபிடிக்கிறார்.
சென்னை: தேசத் துரோக வழக்கில் புழல் சிறையில் இருக்கும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மௌனவிரதம் இருக்கிறார். அதனால், யாருடனும் எதற்காகவும் பேசாமல் அமைதியாக உள்ளார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது, 2008 ஆம் ஆண்டு தேசத் துரோக வழக்கு தொடரப்பட்டது. ஆனால் கடந்த 8 ஆண்டுகளாக விசாரணை முடிவின்றி சென்று கொண்டிருந்ததால், வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் எனக் கூறி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி, அவரை கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார். ஜாமீனில் செல்ல விருப்பமில்லை என்று கூறி, வைகோ சிறைக்குச் சென்றார். தற்போது அவர் புழல் சிறையில் முதல் வகுப்பு 'செல்'லில் இருக்கிறார்.
சிறையில் இருக்கும் வைகோ, இன்று முழுவதும் மௌன விரதம் இருக்கிறார். இன்று வைகோவின் தந்தை வையாபுரியின் நினைவு தினம் என்பதால் வைகோ மௌனவிரதம் மேற்கொண்டுள்ளார். மௌனவிரதத்தின்போது தண்னீர் கூட குடிப்பது இல்லை.
வைகோவின் தந்தை வையாபுரி கடந்த 1973ஆம் ஆண்டு இறந்தார். கடந்த 43 வருடங்களாக தந்தையின் நினைவு தினத்தன்று வைகோ மௌன விரதம் மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இவ்விரதத்தை வைகோ தொடர்வார்.