ராத்திரி நேரத்தில் சீருடையுடன் கிரிக்கெட் ஆடிய இன்ஸ்பெக்டர் அமுதச் செல்வி டிரான்ஸ்பர்
ராமேஸ்வரம்: இரவுப் பணியின்போது சீருடையில் சக காவலர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் ஆடிய பெண் இன்ஸ்பெக்டர் அமுதச் செல்வி ஆயுதப் படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் அடிக்கடி அன்னிய நாட்டுப்படகுகள் கரை ஒதுங்குவதும், கஞ்சா போன்ற போதைபொருட்கள் கடத்தல் சம்பவங்கள் அதிகளவில் நடைபெற்றும் வருகின்றன. ஆனால் காவல்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் மிகவும் மெத்தனத்துடன் செயல்பட்டு வருவதால், இலங்கையில் இருந்து கடத்தப்படும் கஞ்சா மூட்டை மூட்டையாக பிடிபடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் ராமேஸ்வரம் கோவில் காவல் நிலையத்திற்கு உட்பட பகுதியில் உள்ள அக்னி தீர்த்த கரையில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயனிகள் மற்றும் பக்தர்கள் குளித்து நீராடுவார்கள். இதனை பயன்படுத்தும் மர்ம நபர்கள் பக்தர்களிடமிருந்து பணம், நகை, செல்போன் திருட்டு நாள் தோறும் நடைபெற்று வருகின்றது. இதே போன்று கார் பார்க்கிங் பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் அதிகளவில் நடைபெறுகின்றது.
காவல்துறையினர் இது வரையில் இது போன்ற திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டவர்களில் ஒருவரை கூட கைது செய்தது கிடையாது. கடந்த வாரத்தில் ராமேஸ்வரம் அருகே இலங்கைக்கு செல்ல முயன்ற மூன்று நபர்கள் துப்பாக்கி மற்றும் சைனட்குப்பிகளுடன் கைது செய்யப்பட்டனர்.
இதனால் ராமேஸ்வரம் பகுதியில் உளவுத்துறை அதிகாரிகள் அங்கும் இங்குமாய் சுற்றி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதாக காரணம் கூறி காவல்துறையினர் கோவிலை சுற்றி வாகனங்கள் செல்ல தடை விதித்துள்ளனர்.
இந்த நிலையில் ,கோவில் காவல்நிலைய ஆய்வாளர் அமுதசெல்வி தலைமையிலான காவல்துறையினர் இரவு நேரத்தில் கண்காணிப்பு பணியை மேற்கொள்ளாமல் காவல்நிலையம் அருகே சக காவலர்கள் காவல்துறை சீருடையுடன் மற்றும் அந்த பகுதியை சேர்ந்தவர்களுடன் சேர்ந்து கிரிகெட் விளையாடியது அம்பலமாகியுள்ளது.
முதலில் ஆண் காவலர் ஒருவருக்கு அமுதச் செல்வி பந்து வீசுகிறார். ஆண் காவலர் அடிக்கிறார். பின்னர் ஆண் காவலர் பந்து வீசு, அமுதச் செல்வி அடிக்கிறார். இப்படியாக மாறி மாறி மாறி விளையாடியுள்ளனர். இதுதொடர்பான காட்சிகள் வாட்ஸ் ஆப்பில் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியது.
இதையடுத்து அமுதச் செல்வியை ஆயுதப்படைக்கும், மற்றவர்களை வேறு இடங்களுக்கும் டிரான்ஸ்பர் செய்து உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.