ஆர்கே.நகரில் வாக்காளர்களுக்கு கொடுக்க ரூ.50 கோடி ரெடி.. எப்படி தடுப்பது? யோசனையில் தேர்தல் ஆணையம்
ஆர்கே.நகரில் வாக்காளர்களுக்கு கொடுக்க அரசியல் கட்சிகள் 50 கோடி ரூபாயை தயாராக வைத்துள்ளதாக உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை: ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு வாரி வழங்க 50 கோடி ரூபாய் பணத்தை அரசியல் கட்சிகள் தயாராக வைத்துள்ளது என மாநில உளவுப்பிரிவு, உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளது. இதனால் பணப்பட்டுவாடாவை எப்படி தடுப்பது என தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆர்.கே.நகரில் வரும் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதிமுக அம்மா கட்சி சார்பில் டிடிவி.தினகரனும், அதிமுக புரட்சித் தலைவி அம்மா சார்பில் ஓபிஎஸ் அணியின் மதுசூதனனும் திமுக சார்பில் மருதுகணேஷ், பாஜக சார்பில் கங்கை அமரன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.
தேமுதிக, நாம் தமிழர்கட்சி உள்ளிட்டவையும் இடைத்தேர்தல் களம் காண உள்ளன. தமிழக அரசியலில் தற்போதுள்ள குழப்ப சூழலை சாதகமாக்கி வெற்றிக்காண அனைத்துக் கட்சிகளும் முனைப்புக் காட்டி வருகின்றன.
அனல் பறக்கும் பிரச்சாரங்கள்
இதற்கான பணிகளில் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. ஆர்கே.நகர் தொகுதியில் அரசியல் கட்சிகளின் அனல் பறக்கும் பிரச்சாரங்களும் பொதுக்கூட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
கணக்கெடுக்கும் பணியும்
இது ஒருபுறம் இருக்க ஆர்கே.நகர் தொகுதியில் எத்தனை வீடுகள் உள்ளன? அவர்கள் எந்தக்கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்? பணம் கொடுத்து அவர்களின் வாக்கை விலைக்கு வாங்க முடியுமா என கணக்கெடுக்கும் பணியையும் அரசியல் கட்சிகள் நடத்தி வருகின்றன.
உயர் அதிகாரிகள் அதிர்ச்சி
தற்போதுள்ள சூழலில் ஆர்கே நகர் தொகுதியில் 50 கோடி ரூபாய் பணத்தை இறக்க அரசியல் கட்சிகள் தயாராக இருப்பதாக மாநில உளவு பிரிவு போலீசருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை அறிந்த உயர் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனராம்.
அதிகாரிகள் ஆலோசனை
ஒரு ஓட்டுக்கு 3000 முதல் 5000 வரை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் 5 பேர் உள்ள ஒரு குடும்பத்திற்கு 25000 ரூபாய் கிடைக்கும் என்பதால் எளிதாக வாக்குகளை விலைக்கு வாங்க முடியும் என்பதால் பணப்பட்டுவாடாவை எப்படி தடுப்பது என தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிது.
டிடிவி.தினகரன் மீது குற்றச்சாட்டு
இதனிடையே டிடிவி.தினகரன் ஆதரவாளர்கள் பல்வேறு வடிவங்களில் வாக்குகளை விலை பேசி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தேர்தல் ஆணையத்திலும் மற்ற அரசியல் கட்சிகள் புகார் அளித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.