ஓபிஎஸ் ஆதரவாளருக்கு அரிவாள் வெட்டு.. ரத்தக்களறியான ஆர்கே.நகர்!
ஆர்கேநகர் தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த ஓபிஎஸ் ஆதரவாளர் நித்யானந்தத்தை டிடிவி.தினகரன் தரப்பினர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: ஆர்கே.நகர் இடைத்தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ளன. நாளையுடன் பிரச்சாரம் முடிவடைய உள்ள நிலையில் விடுமுறை நாளான இன்று ஆர்கே.நகர் தொகுதியின் அனைத்து வீதிகளிலும் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
ஆர்.கே நகர் தொகுதிக்குட்பட்ட எழில்நகரில் இன்று ஒ.பி.எஸ் அணி வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து அப்பகுதி கிளைச் செயலாளர் நித்யானந்தம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் நித்யானந்தத்தை அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர்.
இதனைக் கண்ட அப்பகுதியினர் கூச்சலிட்டபடியே சிதறி ஓடினர். கை, மார்பு உள்ளிட்ட இடங்களில் படுகாயமடைந்த நித்யானந்தம் அங்கேயே மயங்கி விழுந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ் துணை கமிஷனர் ராமர் மற்றும் துணை ராணுவப் படையினர் நித்யானந்தத்தை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
நித்யானந்தத்தை வெட்டியது சசிகலா ஆதரவு ஈரோடு மாவட்ட செயலாளர் ராமலிங்கம் என ஓபிஎஸ் அணியினர் போலீஸில் புகார் அளித்துள்ளனர். நித்யானந்தத்துக்கு உடம்பில் பல்வேறு இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்துள்ளதால், அவருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த அரிவாள் வெட்டு சம்பவத்தால் ஆர்கே நகர் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அங்கு மாநகர காவல்துறையினரும், துணை ராணுவப்படையினரும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆர்.கே.நகரில் தினகரன் அணியினர் மிரட்டியதால் ஓபிஎஸ் ஆதரவாளர் கண்ணப்பன் கடந்த 25ஆம் தேதி இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.