ஒத்த ரூபாய்க்கு புது சட்டை.. அடித்து பிடித்து குவிந்த கூட்டம்.. காரைக்குடியை கலக்கிய கடைக்காரர்!
காரைக்குடி: ஒரு ரூபாய்க்கு ஒரு சட்டை.. என்ற அறிவிப்பை பார்த்ததும், காரைக்குடி ஐந்து விளக்கு பகுதியே திக்குமுக்காடி போய்விட்டது!
பொதுவாக ஒரு கடை திறப்பு விழா என்றால் நடிகர், நடிகைகள் வருவார்கள்.. அப்போதுதான் கடை பிரபலமாகும் என்பதால் இப்படி செய்வார்கள்...மேலும் சிலர் விளம்பரங்களை வகை வகையாக வைத்து ஊர் முழுக்க தெரியப்படுத்துவார்கள்.
இங்கே நம்ம ஆள் ஒருத்தர் வித்தியாசமா யோசிச்சிருக்கார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஐந்து விளக்கு பகுதியில் இன்றைக்கு வியாபாரி, புதுசா ஜவுளி கடையை திறந்தார். திறப்பு விழா சலுகை என்ற பெயரில் முதலில் வரும் 599 பேருக்கு ஒரு ரூபாய்க்கு ஒரு சட்டை என அறிவித்தார்.
இந்த சமாச்சாரம் சுற்றுவட்டார பகுதி முழுக்க பரவி விட்டது. ஓனர் கடையை திறக்கும் முன்னரே, மக்கள் கூட்டம் நிறைந்த வழிந்தது. விடிகாலையிலேயே, பெரியவர்கள், சின்னவர்கள் என்று பெரிய கியூ நின்றது. கொஞ்ச நேரத்தில் வெயிலும் சுள்ளென அடிக்க ஆரம்பித்தது. அதையும் இவர்கள் பெரிசா நினைக்கலையே.. எப்போ சட்டை கிடைக்கும் என்றே காத்து கிடந்தனர்.
அறிவிக்கப்பட்டது 599 பேருக்கு என்றாலும் குவிந்ததோ அதைவிட அதிகமானோர். இதனால் முண்டியடித்து சட்டை வாங்கும் நிலை ஏற்பட்டது. தகவல் போலீசுக்கு எட்டியதும், விரைந்து வந்து நிலைமையை சமாளித்தார்கள்.
கடைசியில் 599 பேரை தாண்டி, 600 பேருக்கு ரூபாய்க்கு ஒரு சட்டை விற்கப்பட்டது. அதற்கு மேல் இல்லை என்று சொல்லியும், பல மணி நேரம் மக்கள் காத்து கிடந்தனர். சட்டைகள் எல்லாம் விற்றாயிற்று என்று சொன்னபிறகுதான் வாடிய முகத்துடன் அவர்கள் வீடு திரும்பினர்.
கடை ஓனர் செம புத்திசாலி.. லட்சக்கணக்கில் செலவு செய்து கடையை விளம்பரப்படுத்துவதற்கு பதிலாக, 600 பேருக்கு ஒரு சட்டையை கொடுத்து மொத்தமாக ஒரே நாளில் ஃபேமஸ் ஆகிவிட்டார்!