சிவகாசியில் கோழி குழம்பு சாப்பிட்ட 4 பேர் பலியான வழக்கில் திருப்பம்! சகோதரி விஷம் கொடுத்தது அம்பலம்
சிவகாசியில் நேற்று முன் தினம் பலியான நான்கு பேரும் மது குடித்து பலியாகவில்லை விஷம் கலந்த உணவை சாப்பிட்டதால் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
Recommended Video
சிவகாசியில் நேற்று முன் தினம் 4 பேர் மது குடித்து உயிரிழந்ததாகக் கருதப்பட்ட நிலையில், பாலியல் தொந்தரவு கொடுத்த தம்பியை சகோதரியே கோழிக்கறியில் விஷம் வைத்துக் கொன்ற பயங்கரம் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிவகாசி அருகே நேற்று முன் தினம் ஞாயிற்றுக்கிழமை சிவகாசியில் 4 பேர் மது குடித்த பின்னர் அடுத்தடுத்து உயிரிழந்தார்கள். அதோடு மேலும், சிலர் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். இந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த காவல் துறையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டன. காவல் துறையின் விசாரணையில் உயிரிழந்த 4 பேரும் மதுக் குடித்து உயிரிழக்கவில்லை. விஷம் கலந்த கோழிக்கறியை சாப்பிட்டதால் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
சிவகாசியை சேர்ந்த தர்மராஜ் என்பவருக்கு 2 மனைவிகள். இவருடைய முதல் மனைவி வாணிக்கு அய்யப்பன் (22) என்ற மகன் உள்பட 5 பிள்ளைகள். உள்ளனர். இரண்டாவது மனைவி இந்திராணிக்கு வள்ளி (33), முருகன் (22) என்ற 2 பிள்ளைகள். இவர்களில் இந்திராணி முத்தாட்சி மடத்தில் வசித்து வருகிறார்.
இதில் இரண்டாவது மனைவியின் மகள் வள்ளிக்கும், கோவையை சேர்ந்த நேரு கண்ணன் என்பவருக்கும் 2008 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. சிறிது காலத்துக்குப் பின்னர், கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் கணவரைப் பிரிந்த வள்ளி தாய்வீட்டுக்கு வந்து அந்த பகுதியில் உள்ள ஒரு அச்சகத்தில் வேலை செய்து வருகிறார். மேலும், வள்ளியின் தம்பி முருகனுக்கு மது, கஞ்சா போன்ற பல தீய பழக்கங்கள் இருந்துள்ளன.
இந்த நிலையில், நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை காலை முருகன், அவருடைய சகோதரர் அய்யப்பன் (22), நண்பர்கள் கணேசன் (21), முகமது இப்ராகிம் (22), கவுதம் (15), ஜனார்த்தனன் என்கிற சாஸ்தா சரவணன் (13), ஹரிஹரன் என்கிற அந்தோணி (22) ஆகியோருடன் முத்தாட்சி மடத்தில் உள்ள தனது வீட்டில் சமைத்து வைக்கப்பட்டிருந்த கோழிக்கறி குழம்புடன் சாப்பாடு சாப்பிட்டுள்ளனர். பின்னர், அவர்கள் அங்கிருந்து வெளியே சென்றுள்ளனர். இதற்கு முன்னதாக இவர்கள் மது அருந்தியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்த முருகன் வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளார். அவருடன் கோழிக்கறி சாப்பிட்ட மற்றவர்களும் வாந்தி-மயக்கம் ஏற்பட்டு விழுந்தனர். அருகில் இருந்த உறவினர்கள் உடனே அவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால், அங்கே சிகிச்சைப் பலனின்றி கணேசன், கவுதம், முகமது இப்ராகிம் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதே போல, வீட்டில் மயங்கி கிடந்த முருகனும் உயிரிழந்தார். இவர்களுடன் கோழிக்கறி சாப்பிட்ட மற்ற 4 பேரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து, முதலில் கெட்டுப்போன மது அருந்தியதால்தான் 4 பேர் உயிரிழந்ததாகத் தகவல் பரவியது. மேலும், அதே மதுக்கடையில் மது அருந்திய 4 பேர் சந்தேகத்தில் சிவகாசி மருத்துவமனையில் சேர்ந்தனர்.
இந்நிலையில், இறந்துபோன 4 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில், அவர்களின் வயிற்றில் குருணை மருந்து என்கிற விஷமும் மதுவும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் கோழிக்கறி சாப்பிட்ட அந்தோணி போலீசாரிடம் கூறிய சில தகவல்களின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து, போலீசார் முருகனின் பூட்டியிருந்த வீட்டை திறந்து பார்த்தபோது அங்கே விஷம் கலந்த கோழிக்கறி உணவு மீதம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விஷம் கலந்த கோழிக்கறி தொடர்பாக, முருகனின் தாயார் இந்திராணி, அக்கா வள்ளி ஆகியோரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், வள்ளியின் தம்பி முருகன் தனக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுத்ததால் அவரை கொல்ல உணவில் விஷம் கலந்து வைத்ததை ஒப்புக்கொண்டார். இதைத் தொடர்ந்து போலீசார் வள்ளியை கைது செய்தனர்.
விசாரணையில் வள்ளி கூறியதாக போலீஸார் தெரிவித்ததாவது, வள்ளி கணவனை பிரிந்து தாயுடன் வசித்துவந்தார் என்றும், தனது தம்பிக்கு கடந்த 2 ஆண்டுகளாக தீய பழக்கங்கள் அதிகரித்ததால் எல்லை மீறி நடக்க ஆரம்பித்தான் என்று கூறியுள்ளார். மேலும், சில நாட்களாக தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் இதை யாரிடமும் சொல்ல முடியாமல் தவித்ததாகவும்தெரிவித்துள்ளார்.
அதோடு, இதை தனது தாயிடமும் கூட சொல்லவில்லை என்று கூறிய வள்ளி தனது தம்பியை விஷம் வைத்து கொல்ல திட்டம் தீட்டியுள்ளார். இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை காலையில் உணவு சமைக்கும்போது கோழிக் குழம்பில் குருணை மருந்தை கலந்து வைத்துவிட்டு இருக்கன்குடி கோவிலுக்கு தாயுடன் சென்றுள்ளார். அந்த உணவை சாப்பிட்டு தம்பி முருகன் இறந்துவிட்டால், தற்கொலை செய்துகொண்டான் என்று கூறி தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைத்துள்ளார். ஆனால், முருகனுடன் மேலும் 3 பேர் இறந்ததால் போலீசாரின் விசாரணையில் தான் சிக்கிக்கொண்டதாக வள்ளி கூறியுள்ளார்.
ஆனாலும், போலீசார் இந்த சம்பவத்தில் வள்ளிக்கு வேறு யாராவது உதவி இருப்பார்களா? மேலும், வள்ளி வேலை செய்துவந்த அச்சகத்தின் உரிமையாளர் செல்வம் என்பவருக்கு இதில் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட வள்ளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுசிறையில் அடைக்கப்பட்டார்.
முதலில் சந்தேக மரணமாக வழக்குப் பதிவு செய்த சிவகாசி டவுன் போலீசார் இதனை கொலை வழக்காக மாற்றிப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் திறமையாக துப்பு துலக்கிய காவலர்களுக்கு காவல்துறை கண்காணிப்பாளர் ராஜராஜன் பாராட்டு தெரிவித்தார்.